மடிக்கணினிகளை ஒப்படைத்தும், தற்செயல் விடுப்பு எடுத்தும் விஏஓ-க்கள் இன்று போராட்டம்...
தேனி
தேனியில் மடிக்கணினிகளை திரும்ப ஒப்படைத்தும், தற்செயல் விடுப்பு எடுத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள் இன்று போராட்டம் நடத்துகின்றனர்.
தேனி மாவட்டம், போடியில் கிராம நிர்வாக அலுவலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
"இணைய வழிச் சான்று வழங்க செலவினத் தொகையை உடனே வழங்க வேண்டும்.
கூடுதல் பொறுப்பு கிராமங்களுக்கு தனி பொறுப்பூதியம் வழங்க வேண்டும்.
நகர பட்டா மாறுதல் மற்றும் உட்பிரிவு பட்டா மாறுதலுக்கு கிராம நிர்வாக அலுவலர் பரிந்துரையை கட்டாயமாக்க வேண்டும்.
கிராம நிர்வாக அலுவலர்களிடையேயான மாவட்ட மாறுதல்களை உடனடியாக வழங்க ஆணையிட வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைப்பெற்றது.
இந்நிலையில், அரசு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வராததைக் கண்டித்து, கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினிகளை திரும்ப ஒப்படைத்து இன்று (டிசம்பர் 27) தற்செயல் விடுப்பு எடுக்கும் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
இதற்காக, போடியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று மாலை போடி வட்டாட்சியர் ராணியை சந்தித்து, தங்களுக்கு அளிக்கப்பட்ட மடிக்கணினிகளை ஒப்படைத்தனர். மேலும், தற்செயல் விடுப்பு விண்ணப்பமும் வழங்கினர்.