மதுரையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடைபெற்ற ஆடு மாடுகள் மாநாட்டில் சீமான் கலந்து கொண்டார். மாடுகளை பாதுகாக்கும் RSS கோசாலைகளும் சீமானின் மாநாடுகளும் ஒரே நோக்கத்தில் நடத்தப்படுவதாக வன்னி அரசு விமர்சித்துள்ளார்.
மதுரை மாவட்டம் விராதனூர் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடைபெற்ற ஆடு மாடுகள் மாநாட்டில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். மேடையின் முன்பாக இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட நாட்டின மாடுகள், எருமை மாடுகள், ஜல்லிக்கட்டு மாடுகள் மற்றும் ஆடுகள் உள்ளிட்டவைகளை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
15 தீர்மானங்கள் நிறைவேற்றம்
மாநாடு தொடங்கியவுடன் ஆடு மாடுகள் மாநாடு தொடர்பாக 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் மாடுகளை பாதுகாக்கும் RSS கோசாலைகளும் சீமானின் மாநாடுகளும் ஒரே நோக்கத்தில் நடத்தப்படுகின்றன என வன்னி அரசு விமர்சனம் செய்துள்ளார்.
இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: இன்று அழகு முத்துக்கோன் குருபூஜை விழா நடைபெறுகிறது. இதையொட்டி நேற்றே ஆடு மாடுகளுக்கான மாநாட்டை மதுரையில் நடத்தியிருக்கிறார் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
பின்னணி RSS
ஆரியக்கோட்பாடான குலக்கல்வித்திட்டத்தை ஊக்கப்படுத்தவே இந்த மாநாட்டை RSS பின்னணியில் நடத்தியுள்ளார். பார்ப்பனரல்லாத சமூகம் படிக்ககூடாது என்பது தான் சனாதனம். அந்த சனாதனத்தை நிலை நிறுத்த பார்ப்பனக்கும்பலின் பின்னணியோடு இப்படியான மாநாடுகளை நடத்துகிறார் சீமான். மாடுகளை பாதுகாக்கும் RSS கோசாலைகளும் சீமானின் மாநாடுகளும் ஒரே நோக்கத்தில் நடத்தப்படுகின்றன.
சாதி வெறியின் எச்சம்
பனை ஏறி கள்ளு குடிக்க வலியுறுத்துவதும் மாடுகளை மேய்க்கச்சொல்லுவதும் குடி பெருமையின் உச்சம். சாதி வெறியின் எச்சம். அது சரி,மாடுகளை மேய்க்கவும் பனை ஏறவும் பார்ப்பனர்களை வலியுறுத்துவாரா? அல்லது காலம் காலமாய் தொழில் செய்வோரே செய்யணுமா? என தெரிவித்துள்ளார்.
