கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த வண்டலூர் பூங்கா இன்று முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படும் என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த வண்டலூர் பூங்கா இன்று முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படும் என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் இன்று முதல் பிப்ரவரி 15 ஆம் தேதி வரை சில கட்டுப்பாடுகளை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை தீவிரமடைந்ததை அடுத்தும், ஒமைக்ரான் பரவல் காரணமாகவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
கடந்த மாத தொடக்கத்தில் 30 ஆயிரத்தை தாண்டிய தினசரி பாதிப்பு, கட்டுப்பாடுகளுக்குப் பின்னர் வெகுவாக குறையத் தொடங்கியது. இதனால் கட்டுபாடுகளில் தளர்வுகள் அறிவித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு போன்ற கட்டுபாடுகள் கடந்த வாரம் விலக்கிக்கொள்ளப்பட்டன. இருப்பினும் கொரோனா பரவலைக் கட்டுக்குள் வைத்திட மேலும் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படாமல் உள்ளன.
அந்தவகையில் பிப்ரவரி 15 ஆம் தேதி வரை கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் யோகா பயிற்சி நிலையங்கள் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். அனைத்து திரையரங்குகளிலும் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் அதிசபட்சம் 50% பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். உள் விளையாட்டு அரங்குகளில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 50% பார்வையாளர்களுடன் விளையாட்டு போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
வழக்கமான பயிற்சிகள் நடத்த தடையில்லை. அனைத்து உள் அரங்குகளில் நடத்தப்படும் கருத்தரங்கங்கள், இசை, நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் அதிகபட்சம் 50% பார்வையாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி நடத்த அனுமதிக்கப்படும். அழகு நிலையங்கள், சலூன்கள் போன்றவை ஒரு நேரத்தி 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.அனைத்து பொழுதுபோக்கு கேளிக்கைப் பூங்காக்கள் நீர் விளையாட்டுகளைத் தவிர்த்து கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 50 சதவிகிதம் வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுத்தொடர்பாக பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா பரவல் காரணமாகவும் சுமார் 60 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டதாலும் வனவிலங்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி ஜனவரி 17 ஆம் தேதி பூங்கா மூடப்பட்டது.தற்போது தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதாலும் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதாலும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி இன்று முதல் பூங்கா பொதுமக்கள் பார்வைக்கு மீண்டும் திறக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
