சனாதனத்தை எதிர்த்தவர் வள்ளலார்: ஆளுநர் ரவிக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்!
சனாதனத்தை எதிர்த்தவர் வள்ளலார் என ஆளுநர் ரவிக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்
கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலாரின் 200 ஆவது ஜெயந்தி விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி, 10,000 வருட சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார். சனாதன தர்மத்தின் மாணவனாகிய நான் பல ரிஷிகளின் நூல்களைப் படித்தவன். அப்படி வள்ளலாரின் நூல்களையும் படித்தபோது மிக பிரமிப்படைந்ததாக தெரிவித்தார்.
அறியாமை மற்றும் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே சிலர் சனாதன தர்மத்தை எதிர்க்கிறார்கள். சனாதன தர்மத்தை ஏற்றாலும் எதிர்த்தாலும் அவர்களும் சனாதன தர்மத்திற்குள்ளேயே இருப்பார்கள் எனவும் ஆளுநர் ரவி அப்போது தெரிவித்தார். பிஷப் போப், கால்டுவெல் போன்றவர்கள் நமது அடையாளத்தை அழிக்க வேண்டும் என நினைத்தவர்கள் என குற்றம் சாட்டிய ஆளுநர், இந்திய சமூகக் கட்டமைப்பை குலைக்க நினைத்த கார்ல் மார்க்ஸ் ஆங்கிலேயருக்கு உதவியதாகவும் விமர்சித்தார்.
தமிழ்நாடு ஆளுநர் ரவி, தான் செல்லும் இடங்களில் எல்லாம் சனாதன கருத்துகளை பரப்புவதாகவும், அரசியல் அமைப்பு பதவிக்கு மீறிய செயல்களில் ஈடுபட்டு ஆர்.எஸ்.எஸ்ஸின் சித்தாந்தத்தை புகுத்தும் ஒரு அரசியல்வாதியாகவே செயல்பட்டு வருகிறார் என்று குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில், ஆளுநரின் தற்போதைய சனாதனம் தொடர்பான பேச்சு விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
ஆளுநரின் இந்த பேச்சுக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ““மதித்த சமயதம் வழக்கெல்லாம் மாய்ந்தது, வர்ணாசிரமெனும் மயக்கமும் சாய்ந்தது” என்று சனாதனத்தை எதிர்த்த வள்ளலாரை சனாதனத்தின் உச்சநட்சத்திரம் என்கிறார் ஆளுநர். ஆளுநர் அவர்களே, வள்ளுவரும் வள்ளலாளரும் நீங்கள் விழுங்கவே முடியாத கலகக்குரல்கள். மட்டுமல்ல சனாதனத்தை விரட்டிய ஆதிக்குரல்கள்.” என்று பதிவிட்டுள்ளார்.