Asianet News TamilAsianet News Tamil

ஐட்ரோ கார்பனுக்கு எதிரான வழக்கில் வருகிற 13-ஆம் தேதி வைகோ வாதாடுகிறார் – சிங்கம் களமிறங்கிடுச்சு மூமண்ட்…

Vaiko argues on 13th in the case against hydrocarbon
Vaiko argues on 13th in the case against hydrocarbon
Author
First Published Sep 11, 2017, 7:19 AM IST


தஞ்சாவூர்

புதுக்கோட்டை மாவட்ட விவசாய அணி சார்பில் பசுமைத் தீர்ப்பாயத்தில் ஐட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் வருகிற 13-ஆம் தேதி தான் நேரில் ஆஜராகி வாதாட இருப்பதாக தஞ்சாவூரில் வைகோ தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வந்த மதிமுக கட்சியின் தலைவர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அதில், திராவிட இயக்கத்திற்குச் சோதனையான கால கட்டத்திலும், தமிழகத்தின் இயற்கை வளத்திற்கு பேராபத்து ஏற்பட்டுள்ள சோதனையான கால கட்டத்திலும் சரித்திர புகழ் பெற்ற தஞ்சாவூரில் அண்ணாவின் 109-வது பிறந்தநாள் விழா மாநாடு வருகிற 15-ஆம் தேதி பிற்பகல் 1.30 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்கிறது. இதை ஒரு மாநில மாநாட்டை போல் நடத்துகிறோம்.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வராது என்று ஊர், ஊராகச் சென்று கட்சி வேறுபாடின்றி பிரச்சாரம் மேற்கொண்டேன்.

மீத்தேன், ஷேல் எரிவாயு, ஐட்ரோ கார்பன் திட்டம் ஆகியவற்றை எதிர்த்தோம். ஐட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டை மாவட்ட விவசாய அணி சார்பில் பசுமைத் தீர்ப்பாயத்தில் ஐட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளோம். வருகிற 13-ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. நான் நேரில் ஆஜராகி வாதாட இருக்கிறேன்.

நமது வருங்கால சந்ததியினரைக் காக்க, உணவின்றி வாழ வேண்டிய நிலைக்கு ஆளாகிவிடாமல் இருக்க அறப் போராட்டத்திற்கு மக்களை தயார்படுத்த வேண்டும். அரசியல் நோக்கத்திற்காக அல்ல. தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அல்ல. மக்களை, வருங்கால தலைமுறையை காக்க வேண்டும் என்பதற்காக தான்.

மதசார்பற்ற கட்டுமானத்தை சிதைக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. மதசார்பின்மை பற்றிப் பேசுபவர்களை சுட்டுக் கொல்லக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் பன்முக தன்மையை சிதைக்கும் வகையில் இந்துத்துவா கொள்கையை ஏற்று மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

திராவிட இயக்கம் இல்லாத மாநிலத்தை உருவாக்குவோம் என்று சொல்கிறார்கள். இலட்சக்கணக்கான குடும்பத்தினர் தியாகம் செய்து, பாடுபட்டு கட்டிக் காக்கப்பட்ட இந்த திராவிட இயக்கத்தை யாராலும் சிதைக்க முடியாது.

நீட் தேர்வு சமூக நீதியை சிதைத்து சமாதி கட்டும். ஏழை, எளிய மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். அமெரிக்காவில் பிரபலமான மருத்துவர்கள் எல்லாம் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படித்தவர்கள் தான்.

கல்வித் துறையை காவி மயமாக்கும் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. நீட் தேர்வு வேண்டும் என்று சிலர் சொல்வது அவர்களது தனிப்பட்டக் கருத்து.

நீட் தேர்வை எதிர்த்து போராட்டம் வேண்டாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவில்லை. வன்முறை இல்லாமல், மக்களுக்கு பாதிப்பின்றி போராட்டம் நடத்தலாம் என்று தான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆனால், போராட்டத்திற்கே தடை விதித்து இருப்பதைபோல் தமிழக அரசு கருதி கொண்டு திருச்சியில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிக்காமல் ரத்து செய்யப்பட்டுள்ளது என கூறியது தவறானது. ஜனநாயக விரோத நடவடிக்கையாகும்.

பொதுக் கூட்டம் நடத்தினால் எப்படி மக்களுக்கு பாதிப்பு ஏற்படும். ஆனால் இதை எல்லாம் துச்சமென தூக்கி எறிந்துவிட்டு சகோதரர் மு.க.ஸ்டாலின், பிற கட்சி தலைவர்களை எல்லாம் அழைத்து பேசி கூட்டத்தை நடத்தியதை வரவேற்கிறேன்.

காவலாளர்களை வைத்து எதையும் தடுத்து விடலாம் என தமிழக அரசு நினைத்தால் அது எதிர்விளைவை ஏற்படுத்தும்.

நீட் தேர்வை எதிர்த்து மாணவர்கள் அவர்களாகவே போராடி வருகின்றனர். தமிழகத்தில் நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும். அடுத்து பொறியியல் படிப்பிற்கு நீட் தேர்வு கொண்டு வர முயற்சி செய்கிறார்கள்.

மத்திய அரசு அ.தி.மு.க-வை ஆட்டி படைக்கிறது என்ற எண்ணம் மக்களிடம் பரவி வருகிறது” என்று அவர் தனக்கே உரிய பாணியில் தெரிவித்தார்.

இந்தப் பேட்டியின்போது மாநில துணைப் பொதுச் செயலாளர் துரை.பாலகிருஷ்ணன், முன்னாள் எம்.பி. கணேசமூர்த்தி, மாவட்டச் செயலாளர் கோ.உதயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios