மாமல்லபுரத்துக்கு வந்த அமெரிக்க தூதர்; புராதனச் சின்னங்களை சுற்றிப் பார்த்து மகிழ்ச்சி...
காஞ்சிபுரம்
புதுடெல்லியில் உள்ள இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் மாமல்லபுரம் சுற்றுலா தளத்துக்கு வந்து கடற்கரை கோயில் உள்ளிட்ட புராதனச் சின்னங்களை சுற்றிப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தார்.
புதுடெல்லியில் உள்ள இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் கென்னத் ஐ.ஜஸ்டர் விமானம் மூலம் நேற்று சென்னை வந்தார். அவர், கிழக்கு கடற்கரை சாலை வழியாக மாலை 4 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரம் சுற்றுலா நகரத்துக்கு வந்தார்.
அங்கு, புராதன சின்னமான மாமல்லபுரம் கடற்கரை கோயிலுக்குச் சென்ற அவர், அங்குள்ள பல்லவர் கால சிற்பங்களை சுற்றிப் கண்டு ரசித்தார்.
அவருக்கு தொல்லியல் துறை அலுவலர் காயத்ரி, பல்லவர் காலத்து புராதனச் சின்னங்களின் சிறப்பு குறித்தும், அதன் வரலாறு குறித்தும் விளக்கினார்.
பல்லவர்கால சிற்பங்களை வியந்து பார்த்த கென்னத் ஐ.ஜஸ்டர், தனது செல்போன் மூலம் கடற்கரை கோயில் சிற்பங்களை படம் பிடித்தார்.
பிறகு, அர்ச்சுனன் தபசு பகுதிக்கு வந்த அவர், அங்குள்ள குடைவரை சிற்பங்களையும், மண்டபங்களையும் பார்த்து ரசித்தார்.
அவரது வருகையையொட்டி, மாமல்லபுரம் டிஎஸ்பி சுப்பாராஜு தலைமையில், காவல் ஆய்வாளர் சிரஞ்சீவி உள்ளிட்ட ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
பாதுகாப்பு காரணங்களுக்காக கென்னத் ஐ.ஜஸ்டர் குண்டு துளைக்காத காரில் பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.