பாஜகவில் மத்திய அமைச்சர் பதவி வரை வகித்த திருநாவுக்கரசர், இப்போது, அந்த கட்சியை ஆள் இல்லாத கட்சி என்று கூறுகிறார். அவருக்கு நன்றி விசுவாசம் இருக்கிறதா என, அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கூறினார்.
தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:–
சமீபத்தில் நடந்து முடிந்த 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 2 பெரிய திராவிட கட்சிகளை எதிர்த்து போட்டியிட்ட பாஜக 3–வது இடத்தை பிடித்துள்ளது. முதலமைச்சர் கனவு காணும் பல கட்சிகளை பாஜக பின்னுக்கு தள்ளியிருக்கிறது. அப்படிப்பட்ட பா.ஜ.க.வை தமிழகத்தில் இல்லை என்றும், அந்த கட்சிக்கு ஆளும் இல்லை என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பேசியுள்ளார். அதே கட்சியில் மத்திய அமைச்சராக இருந்த நன்றி விசுவாசம் அவருக்கு இருக்கிறதா என்பது ஆச்சரியமாக இருக்கிறது.
ஆள் இல்லாத கட்சி என்று சொல்லும் அவர் பாஜகவில் இதற்கு முன் ஏன் சேர்ந்தார் என்று எண்ணிப்பார்க்க வேண்டும். பாஜகவினர் அவரை எம்பியாக்கி, மத்திய அமைச்சராகவும் ஆக்கியது என்பதை அவர் மறக்கலாமா?. இப்போது காங்கிரஸ் கட்சியில் மாநில தலைவர் பதவி கிடைத்தது என்பதற்காக நன்றி உணர்ச்சியை இப்படியா காட்டுவது?.
எங்கள் கட்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் இருக்கிறார். 3 சதவீத வாக்கு வங்கி வைத்துள்ளோம். ஆனால், உங்கள் கட்சியின் நிலை என்ன?. மாவட்ட தலைவர்களாவது உங்களுடன் இருக்கிறார்களா? என்பதை பார்த்துக்கொள்ளுங்கள். நாங்கள் மண்டல நிர்வாகிகள் கூட்டங்களை வெற்றிகரமாக நடத்தி இருக்கிறோம். எங்கள் கட்சி அமைப்பு முறை பற்றி அவருக்கு நன்றாக தெரியும்.
ஆனால், உங்கள் (காங்கிரஸ்) கட்சியின் நிலை என்ன?. உண்மையிலேயே தைரியம் இருந்தால் வரும் உள்ளாட்சி தேர்தலில் தனியாக நின்று எங்களுடன் மோதட்டும். அப்போது தெரியும் எந்த கட்சி ஆள் இருக்கும் கட்சி, எந்த கட்சி ஆள் இல்லாத கட்சி என்று.
இருக்கும் ஆட்களையே இழந்து வரும் காங்கிரஸ், எழுச்சி பெற்றுவரும் பாஜகவை விமர்சிக்க எந்த அருகதையும் இல்லை. திருநாவுக்கரசர் இப்போது இருக்கிற இடம் காமராஜர் சேர்த்து வைத்த இடம். அந்த இடத்தை கூட நிர்வாகம் செய்ய தமிழக காங்கிரசில் யாரும் இல்லை என்று டெல்லி தலைவர்கள் கையில் எடுத்துள்ளார்கள். இந்த லட்சணத்தில் இருக்கும் காங்கிரஸ் பாஜகவை விமர்சிக்க தகுதி இருக்கிறதா? என்பதை யோசித்து பார்த்து விமர்சிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
