சப் கலெக்டர் என்று கூறி கனிமவளத் துறையினரை மிரட்டிய வேலையில்லா பட்டதாரி கைது.. இதுக்குதான் மிரட்டினாரா?
விருதுநகர்
விருதுநகரில், உதவி ஆட்சியர் (சப் கலெக்டர்) என்று கூறி கனிமவளத் துறையினரை மிரட்டிய வேலையில்லா பட்டதாரி கைது செய்யப்பட்டார்.
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரை அடுத்த திருவண்ணாமலையைச் சேர்ந்த சேதுராமன் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளைக்கு விதியை மீறி மண் எடுத்துச்சென்ற மூன்று டிராக்டர்களை கனிம வளத்துறையினர் பறிமுதல் செய்து திருவில்லிபுத்தூர் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
இந்த நிலையில் சேதுராமனின் மகன் சிவசுப்பிரமணியன் (28) விருதுநகரில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கனிமவளத்துறை அலுவலகத்துக்குச் சென்று, “நான் திருவள்ளூர் மாவட்டத்தில் உதவி ஆட்சியர் பயிற்சியில் உள்ளேன்.
எனது தந்தை நடத்தி வரும் செங்கல் சூளைக்கு தேவையான மண் ஏற்றி வந்த வண்டியினை கைப்பற்றியுள்ளார்கள். அந்த வண்டிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்” என்று கூறி மிரட்டியுள்ளார்.
அவர் மீது சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து அவர் பணியாற்றியதாக கூறிய திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்பு கொண்டு விசாரித்தனர்.
அப்போது, சிவசுப்பிரமணியன் என்ற பெயரில் எவருமே அந்த மாவட்டத்தில் உதவி ஆட்சியர் பயிற்சியில் இல்லை என்பது தெரியவந்தது.
அதன் பின்னர், இதுகுறித்து உடனடியாக காவலாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கிராம நிர்வாக அலுவலரின் புகாரின்பேரில் சூலக்கரை காவலாளர்கள் சிவசுப்பிரமணியனை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் என்ஜினீயரிங் பட்டம் பெற்றுவிட்டு வேலை தேடி வருகிறார் என்பது தெரியவந்தது. அவரிடம் விசாரணை தொடர்கிறது.