முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகன் வீட்டில் வருமான வரித்துறையானது நேற்று முதல் சோதனை மேற்கொண்டு வந்தனர். சென்னை கோடம்பாக்கம்  மற்றும் அடையாறு ஆகிய இடங்களில் அவரது வீடுகள், குரோம்பேட்டையில் உள்ள பாலாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் 2வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது. 

சவிதா கல்விக்குழுமம் தொடர்புடைய இடங்களிலிருந்து கணக்கில் வராத ரூ.10 கோடியும், முக்கிய ஆவணங்களையும் வருமானவரித்துறையினர் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

முன்னாள் மத்திய அமைச்சரும், அரக்கோணம் தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமாக பல நிறுவனங்கள் உள்ளன. மதுபான ஆலை, கல்வி நிறுவனங்கள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், நட்சத்திர ஓட்டல், மருந்து பொருள் தயாரிப்பு, ஸ்டீல் தயாரிப்பு நிறுவனங்கள், ஆர்க்கிட் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. 

அதனை தொடர்ந்து சென்னை மற்றும் ஈரோட்டில் உள்ள, சவிதா மருத்துவ கல்வி நிறுவனங்களிலும், அதன் உரிமையாளருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களிலும், நேற்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது பல்வேறு இடங்களில் கணக்கில் காட்டாத பல ஆவணங்கள் மற்றும் பணம் கட்டுகட்டாக சிக்கியதாக கூறப்படுகிறது.

இந்த சோதனையில் திமுக எம்.பி ஜெகத்ரட்சகனின் வீட்டிலிருந்து பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் தங்க நகை, கணக்கில் வராத ரூ.1.2 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. அதேபோல் சவிதா கல்விக்குழுமத்தில் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.10 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும், முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், சவிதா கல்வி குழுமத்தில் சோதனையானது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.