தனியார் பள்ளிகளில் நடக்கும் கட்டண கொள்ளையை தடுக்க கோரி இருசக்கர வாகன பேரணி...
திருவாரூர்
தனியார் பள்ளிகளில் நடைபெறும் கட்டண கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பில் இருசக்கர வாகன கவன ஈர்ப்பு பேரணி நடைப்பெற்றது.
"திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றியம் மற்றும் பேரூராட்சி பகுதிகள் முழுவதும் குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனைப் போக்க வேண்டும்.
தனியார் பள்ளிகளில் நடைபெறும் கட்டண கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும்,
முத்துப்பேட்டை, எடையூர், இடும்பாவனம் ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள மருத்துவர் மற்றும் செவிலியர் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.
இந்த ஆரம்ப சுகாதார நிலையங்களை அனைத்து வசதிகளுடன் கூடிய வகையில் 24 மணி நேரமும் இயக்க வேண்டும்,
முத்துப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு வழங்காமல் பல நாள்களாக நிலுவையில் உள்ள கல்வி உதவித் தொகையை உடனே வழங்க வேண்டும்,
அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்,
பள்ளிகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும்" இதுபோன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பில் இருசக்கர வாகன கவன ஈர்ப்பு பேரணி நடைபெற்றது.
இந்தப் பேரணியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் சிவபுண்ணியம் தொடங்கி வைத்தார். கள்ளிக்குடியில் தொடங்கிய இந்தப் பேரணி முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நிறைவுப் பெற்றது.
கோரிக்கைகளை விளக்கமாக வலியுறுத்தி முன்னாள் எம்எல்ஏ. கே. உலகநாதன், ஏஐடியுசி மாவட்டச் செயலர் சந்திரசேகரஆசாத் ஆகியோர் பேசினர். இதில், இளைஞர் மன்ற நிர்வாகிகள் எஸ்.எம்.சிவச்சந்திரன், கே.சுடர்ரமேஷ், பி.பரமசிவம், இரா.சரவணன் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.