தலைமை ஆசிரியை திட்டியதால்தான் 4 பள்ளி மாணவிகள் தற்கொலை - விசாரணையில் அம்பலம் - 2 ஆசிரியைகள் சஸ்பெண்ட்...!
வேலூர் மாவட்டத்தில் 4 பள்ளி மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தலைமை ஆசிரியை ரமாமணி உட்பட 2 ஆசிரியைகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் தீபா, சங்கரி, மனிஷா, ரேவதி. இவர்கள் 4 பேரும் பணப்பாக்கத்தில் உள்ள ராமாபுரம் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 11ம் வகுப்புப்படித்து வந்தனர்.
நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளனர். ஆனால் மாணவியர் நான்கு பேரும் பள்ளியில் இருந்து திடீரென மாயமாயினர். இவர்களில் மூன்று பேரது பைகள் மட்டும் பள்ளி வகுப்பறையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து பள்ளியில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விவசாயக் கிணற்றின் அருகே இரண்டு சைக்கிள்களும், ஒரு பையும் இருப்பதைப் பார்த்து போலீசாருக்கும் தீயணைப்புத்துறையினருக்கும் அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர்.
இதைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் விவசாயக்கிணற்றுக்குள் மாணவிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் தீபா, சங்கரி உள்ளிட்ட 4 மாணவிகளின் உடல்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் தலைமை ஆசிரியை திட்டியதால் தான் மாணவிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது.
இந்நிலையில், பனப்பாக்கம் அரசு பள்ளி தலைமை ஆசிரியை ரமாமணி மற்றும் வகுப்பு ஆசிரியை ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.