two Tamils person smuggle gold and arrested by srilankan navy

இராமநாதபுரம்

இலங்கை கடல் பகுதியில் 7 கிலோ தங்கத்தை படகில் மறைத்து வைத்து கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த இருவரை அந்நாட்டு கடற்படையினர் கைது செய்தனர்.

இலங்கை கடற்படையினர், கல்பட்டி கந்தகுலியா கடற்கரை பகுதியில் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றுக் கொண்டிருந்த ஒரு படகை சுற்றிவளைத்து பிடித்து கடற்படையினர் விசாரணை நடத்தினர்.

அந்தப் படகில் தமிழகத்தைச் சேர்ந்த இருவர் இருப்பதை அறிந்த இலங்கை கடற்படையினர் படகு முழுவதும் சோதனையிட்டனர். அப்போது 7 கிலோ தங்கக் கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதை இலங்கை கடற்படையினர் கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து ஏழு கிலோ தங்கத்தையும் கைப்பற்றிய இலங்கை கடற்படையினர் அந்த படகையும், அதில் இருந்த தமிழகத்தை சேர்ந்த இருவரையும் இலங்கை சுங்க இலாகா அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ஒன்றே முக்கால் கோடி இருக்குமாம். இதுகுறித்து பிடிபட்ட இருவரிடமும் சுங்க இலாகாவினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இராமேசுவரத்தில் உள்ள மத்திய புலனாய்வு துறையினரும் இந்த கடத்தல் சம்பவத்தில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது? என்று விசாரித்து வருகின்றனர்.