மின் கம்பத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவர் பலி; போலீஸ் விசாரணை...
தேனி
தேனியில் மின் கம்பத்தின் மீது மோட்டார் சைக்கிள் வேகமாக மோதியதில் அதில் பயணம் செய்த இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தேனி மாவட்டம், பழைய அரசு மருத்துவமனைச் சாலை பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி மகன் தினேஷ்குமார் (20). இவர், தேனியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது நண்பர் தேனி, அண்ணாநகர் 2-ஆவது தெருவைச் சேர்ந்த முத்தையா மகன் திவாகரன்(17).
இவர்கள் இருவரும் தேனி பாரஸ்ட் சாலையில் உள்ள தங்களது நண்பர் ஒருவரை பார்க்க மோட்டார் சைக்கிளில் சென்றனர். மோட்டார் சைக்கிளை தினேஷ்குமார் ஓட்டிச் சென்றார்.
அப்போது, என்.ஆர்.டி.நகர் காந்திஜி சாலையில் உள்ள மின் கம்பம் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில், தினேஷ்குமாரும், திவாகரனும் பலத்த காயமடைந்தனர். பின்னர் அவர்கள் இருவரும் மீட்கப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு, சிகிச்சை பலனின்றி தினேஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட திவாகரன், அங்கு சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து தேனி காவல் நிலைய காவலாளர்கள் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.