இரண்டு நாள்கள் கழித்து கடைகள் திறந்ததால் நுகர்வோர்கள் மகிழ்ச்சி…
ஊட்டி,
நீலகிரியில், இரண்டு நாள்களாக அடைக்கப்பட்டிருந்த காய்கறி கடைகள் திறக்கப்பட்டதால் நுகர்வோர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இயல்பு வாழ்க்கை திரும்பியதால் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு தமிழகம் முழுவதும் உள்ள பொதுமக்கள், பல்வேறு அரசியல் கட்சியினர், தன்னார்வ அமைப்பினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ஊட்டியில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கடந்த 6, 7–ஆம் தேதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன.
நேற்று முன்தினம் அரசு பேருந்துகள், மினி பேருந்துகள் வழக்கம் போல இயக்கப்பட்டன. ஆனாலும், பயணிகள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
பொதுமக்கள் நடமாட்டம் குறைந்ததால் குறைந்த அளவிலான ஆட்டோக்களும் இயக்கப்பட்டன.
இந்த நிலையில் கடந்த 2 நாள்களுக்கு பின்னர் நேற்று ஊட்டியில் கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டன. ஊட்டி மார்க்கெட் மற்றும் உழவர்ச்சந்தை 2 நாள்களுக்கு பின்னர் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் காய்கறிகள் வாங்க அதிகளவு ஆர்வம் காட்டினர்.
ஊட்டி மார்க்கெட்டில் இருந்து கேரளா, கர்நாடகா உள்ளிட்ட இடங்களுக்கு காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்படாமல் இருந்தது. நேற்று நேற்று மார்க்கெட் திறக்கப்பட்ட போதிலும் குறைந்த அளவே விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வந்தனர். அவைகள் வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதுகுறித்து வியாபாரிகள், “மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஊட்டியில் கடைகள் அனைத்தும் கடந்த 2 நாள்களாக அடைக்கப்பட்டன. இதனை தொடர்ந்து இன்று (நேற்று) கடைகள் வழக்கம் போல் திறக்கப்பட்டன.
காய்கறி மண்டிகளுக்கு நேற்று பீன்ஸ், முட்டைகோஸ், பீட்ரூட், நூல்கோல் உள்ளிட்ட காய்கறிகள் சுமார் 8 டன் அளவிற்கு விவசாயிகள் கொண்டு வந்தனர். மற்ற நாட்களில் சராசரியாக 12 டன் முதல் 15 டன் வரை காய்கறிகள் வரும்.
மேலும் காய்கறிகள் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இரண்டு நாள்கள் கழித்து கடைகள் திறக்கப்பட்டதால் வியாபாரிகளும், நுகர்வோர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்” என்று அவர்கள் கூறினார்கள்.