போலீஸ் மீது லாரியை ஏற்றி கொல்ல முயன்ற இருவர் கைது; சினிமா பாணியில் விரட்டிப் பிடித்த சப்-இன்ஸ்பெக்டர்கள்...
கன்னியாகுமரி
போலீஸ் மீது லாரியை ஏற்றி கொல்ல முயன்ற மணல் கடத்திவந்த இருவரை சினிமா பாணியில் விரட்டிப் பிடித்து திருவேங்கடம் காவலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம்., தென்காசியில் இருந்து தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டிக்கு லாரியில் மணல் கடத்தப்படுகிறது என்ற தகவல் கன்னியாகுமரி மாவட்டம், திருவேங்கடம் காவலாளர்களுக்கு தகவல் கிடைத்தது.
அந்த தகவலின்பேரில், திருவேங்கடம் காவல் உதவி ஆய்வாளர்கள் ராஜா, மாரிச்செல்வம் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக சங்கரன்கோவில் பகுதியில் இருந்து வேகமாக வந்த லாரியை கைக்காட்டி நிறுத்துமாறு காவலாளர்கள் சைகை காட்டினர். ஆனால், அந்த லாரி நிற்காமல் நேராக உதவி ஆய்வாளர்கள் ராஜா, மாரிச்செல்வம் மீது மோதுவதுபோல வேகமாக வந்தது. சுதாரித்துக் கொண்ட இருவரும் விலகியதால் உயிர் தப்பினர்.
இதனைத் தொடர்ந்து அந்த லாரியை காவலாளர்கள் சினிமா படத்தில் வருவதுபோல விரட்டிச் சென்றனர். சிறிது தொலைவு சென்ற பின்னர் லாரியை நிறுத்திவிட்டு, அதில் இருந்தவர்கள் கீழே இறங்கி தப்பிச் செல்ல முயன்றனர். அப்போது காவலாளர்கள் அவர்களை மடக்கி பிடித்தனர்.
பின்னர், அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், லாரி ஓட்டுநர் தென்காசி சிவராமபேட்டை வடக்கு தெருவைச் சேர்ந்த மணிகண்டன் (40), கிளினர் தென்காசி மலையான் தெருவைச் சேர்ந்த முத்துராமலிங்கம் (30) என்பதும் தெரியவந்தது. இவர்கள் இருவரும் தென்காசியில் இருந்து மணல் கடத்தி வந்ததும் உறுதி செய்யப்பட்டது.
திருவேங்கடம் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) கண்ணன் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்தார். மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.