மணல் கடத்தலைத் தடுத்ததால் துணை தாசில்தாரை கொல்ல முயற்சி; அரசு அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லை...
இராமநாதபுரத்தில் மணல் கடத்தி வந்த டிராக்டர் ஓட்டுநர், தன்னை தடுக்க முயன்ற துணை வட்டாட்சியரை கொல்ல முயன்றார். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிந்த காவலாளர்கள் தப்பியோடிய டிராக்டர் ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.
இராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே உள்ளது குதிரைமொழி கிராமம். இந்தப் பகுதியில் அதிகமாக மணல் கடத்தல் நடக்கிறது என்று கடலாடி வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலை உறுதிப்படுத்தும் பொருட்டு துணை வட்டாட்சியர் செந்தில் வேல்முருகன் தலைமையில் வி.ஏ.ஓ-க்கள் முத்தரசு, இருளாண்டி ஆகியோர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மணல் ஏற்றி வந்த டிராக்டர் ஒன்றை கைக்காட்டி நிறுத்துமாறு கூறினர். ஆனால், ஓட்டுநர் டிராக்டரை நிறுத்தாமல் துணை வட்டாட்சியர் செந்தில் வேல்முருகன் மீது ஏற்றுமாறு வந்துள்ளார். துணை வட்டாட்சியர் சுதாரித்துக் கொண்டு விலகியதால் நூழிலையில் உயிர் தப்பினார்.
டிராக்டர் ஓட்டுநரை பிடிக்க முயன்றனர் ஆனால் அவர் தப்பிசென்றுவிட்டார். பின்னர், துணை வட்டாட்சியர் செந்தில் வேல்முருகன், மணல் கடத்திவந்த டிராக்டர் ஓட்டுநர் தன்னை கொல்ல முயன்றார் என்று சாயல்குடி காவல் நிலையத்திற்குச் சென்று புகார் கொடுத்தார். அந்த புகாரின்பேரில் காவலாளர்கள் வழக்குப் பதிந்து தப்பியோடிய டிராக்டர் ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மணல் கடத்தி வந்த டிராக்டர் ஓட்டுநர் துணை வட்டாட்சியரை கொல்ல முயன்ற சம்பவம் இந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.