தமிழக அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது மகன், மகள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக இந்த சோதனை நடைபெற்றது. எம்எல்ஏ விடுதி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாக அமலாக்கத்துறை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சராகவும், திமுக துணைபொதுச்செயலாளராகவும் இருந்து வருபவர் ஐ.பெரியசாமி. தற்போது திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருந்து வருகிறார். இந்நிலையில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் திண்டுக்கல் துரைராஜ் நகர் பகுதியில் உள்ள அமைச்சர் ஐ. பெரியசாமியின் வீடு, சீலப்பாடி பகுதியில் உள்ள அவரது மகன் பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் வீடு, ரவுண்ட் ரோடு பகுதியில் உள்ள அவரது மகள் இந்திராணி வீடு, சென்னை உள்ளிட்ட 7 இடங்களில் துப்பாக்கி ஏந்திய 30 மத்திய பாதுகாப்புப் படை வீரர்களுடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அத்துமீறி நுழைந்து சோதனை

இந்நிலையில் அமைச்சர் ஐ.பெரியசாமி சென்னையில் இல்லாத காரணத்தினால் அவரது அறை திறக்க முடியாமல் இருந்தது. அதேபோல் பழனி தொகுதி எம்எல்ஏவாக இருக்கும் ஐ.பெரியசாமியின் மகன் செந்தில் குமார் அறைக்கும் சென்று இருக்கிறார். அந்த இடத்தில் சோதனை மேற்கொள்ள முடியாததால் பூட்டை உடைத்து அமலாக்கத்துறை அத்துமீறி நுழைந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

அமலாக்கத்துறை மீது வழக்கு பதிவு

இந்நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்எல்ஏ விடுதி வளாகத்திற்குள் அத்துமீறி உள்ளே நுழைந்ததாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் திருவல்லிக்கேணி போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து திருவல்லிக்கேணி போலீஸ் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் அதிகாரி தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.