வெடிவிபத்தில் 19 பேர் பலி – ஆலை உரிமையாளர் உள்பட 5 பேர் கைது – தொழிற்சாலை உரிமம் ரத்து
திருச்சி துறையூர் அருகே நடந்த வெடி விபத்தில், 19 பேர் உயிர் இழந்த வழக்கில், வெடிமருந்து தொழிற்சாலையின் உரிமையாளர் உள்பட 5 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். மேலும், வெடி மருந்து தொழிற்சாலையின் உரிமத்தை, மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே, முருங்கப்பட்டியில் இயங்கி வந்த தனியார் வெடிமருந்து தொழிற்சாலையில், நேற்று முன்தினம் காலை வெடி விபத்து ஏற்பட்டது. இதில், 19 பேர் உயிர் இழந்தனர். இதில், சிதறிய உடல்களை அடையாளம் காண்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. சில சடலங்கள் மண்ணில் புதைந்து கிடந்தன.
இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து வெடிமருந்து தொழிற்சாலையின் சிவில் இன்ஜினியர் பிரகாசம், திட்ட இயக்குனர் ராஜகோபால், ராஜ மணிகண்டன், கணேஷ், வேங்கடபதி ஆகியோரை கைது செய்தனர். இதற்கிடையில் மத்திய அரசு, வெடி விபத்து ஏற்பட்ட தொழிற்சாலையின் உரிமத்தை ரத்து செய்தது.