பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்கள், “உலகத் திருக்குறள் பேரவைப் பொதுச்செயலர் மறைந்த ந.மணிமொழியன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

உலகத் திருக்குறள் பேரவைப் பொதுச்செயலரும், மதுரை காலேஜ் ஹவுஸ் அதிபருமான ந.மணிமொழியன் ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்தார். அவரது உடல் மதுரை சொக்கிகுளம் புலபாய் தேசாய் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

அவரது உடலுக்கு அதிமுக சார்பில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, முன்னாள் அமைச்சர்கள் வைகைச்செல்வன், வ.து.நடராஜன் ஆகியோரும், திமுக சார்பில் பொன்.முத்துராமலிங்கம், சுப.தங்கவேலன், மு.தென்னரசு உள்ளிட்டோரும், காங்கிரஸ் கட்சி சார்பில் முதுகுளத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் மலேசியாபாண்டியன், தமாகா முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே.எஸ்.கே.ராஜேந்திரன், மார்க்சிஸ்ட் கட்சி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் என்.நன்மாறன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம் மற்றும் செந்தமிழ்க் கல்லூரி சார்பில் அதன் செயலர் ச.மாரியப்பமுரளி, கல்லூரி முதல்வர் சு.விஜயன், மதுரை கம்பன் கழகத் தலைவர் பேராசிரியர் சாலமன்பாப்பையா, பேச்சாளர்கள் தா.கு.சுப்பிரமணியன், கு.ஞானசம்பந்தன், ராஜா, இளசை சுந்தரம், பத்திரிகையாளர் ம.நடராஜன், பாடகர் சீர்காழிசிவசிதம்பரம், புரட்சிக் கவிஞர் மன்றத்தின் தலைவர் பி.வரதராஜன், தமிழ்நாடு தொழில்வர்த்தக சங்க முதுநிலைத் தலைவர் எஸ்.ரத்தினவேல், தலைவர் ஜெகதீசன், பேராசிரியர்கள் க.சின்னப்பா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து, கீரைத்துறையில் உள்ள மின்மயானத்தில் ந.மணிமொழியன் உடல் தகனம் செய்யப்பட்டது. பிறகு இரங்கல் கூட்டம் நடைபெற்றது.