முன் கூட்டியே போராட்டத்தில் குதிக்குமளவுக்கு போக்குவரத்து தொழிலாளர்கள் கல் நெஞ்ச பேர்வழிகளா?! ஏன் இந்த ஸ்டிரைக்?
மக்கள் இப்படி கஷ்டப்படுவார்கள் என்று தெரிந்திருந்தும் ஸ்டிரைக்கில் அதிலும் முன் கூட்டியே குதிக்குமளவுக்கு போக்குவரத்து தொழிலாளர்கள் அவ்வளவு கல் நெஞ்ச பேர்வழிகளா?! ஏன் இந்த ஸ்டிரைக்?...என்று அவர்களிடம் கேட்டால் ‘’இதுவரையில ஆட்சி அமைச்ச ரெண்டு கழகங்களுமே போக்குவரத்து துறையின் வளர்ச்சிக்கு எள்ளையும் கிள்ளிப் போடலை. கடந்த இருபது இருபத்திரெண்டு வருடங்களாக கடும் நஷ்டத்தில் இயங்கிட்டிருக்குது இந்த துறை. இதுக்கு முக்கிய காரணம்
துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் தவறான மற்றும் அலட்சிய போக்குதான். பராமரிப்பு இல்லாத டஞ்சனான அரசு பேருந்துகள் மக்கள் மத்தியில வரவேற்பை இழந்தன.
இதனால வருவாய் குறைஞ்சது. இதை காரணம் காட்டி பேருந்துகளையும், பேருந்து நிலையங்களையும் அடமானம் வைத்து கடன் வாங்கப்பட்டுச்சு. அந்தப் பணமும் போதாத நிலையில பஸ்களை தொடர்ந்து இயக்க, தொழிலாளர்களின் வைப்பு நிதியையும், ஓய்வூதியர்களின் பணப்பலன்களையும் எடுத்து நிர்வாகம் செலவு செய்ய ஆரம்பிச்சுது.
தூக்கமில்லாம ராப்பகலா வண்டி ஓட்டி , ரிட்டயர்டு ஆகி நிம்மதியா வீட்டுல உட்கார்ந்து சாப்பிட நினைச்ச ஊழியர்களுக்கு செட்டில்மெண்ட் பணம் வழங்கப்படலை. வேலையில் இருக்கும் ஊழியர்களுக்கான அரியர்ஸ் பணமும் தரப்படலை. இதையெல்லாம் கூட்டிப் பார்த்தா ஏழாயிரம் கோடிக்கு மேல் இருக்கிறது தெரிஞ்சுது.
வறுமையில் வாடும் ஊழியர்கள் மற்றும் ரிட்டயர்டு ஆனவர்களின் பணத்தை செட்டில் பண்ணுங்கன்னு பல முறை பணிமனை வாசலில் போராடியும் பலனில்லை. அதனால்தான் இந்த ஸ்டிரைக்.
வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் முன்னும் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிகார குழுவிடம் பல முறை பேசிப்பார்த்தும் பலனில்லை.
அதனால்தான் ஞாயிறு மாலையே சட்டுன்னு வண்டியை ஆஃப் பண்ணிட்டோம். மக்களை கஷ்டப்படுத்துவது எங்கள் நோக்கமில்லை. ஆனால் எங்களின் துயரத்தை மக்களும் புரிஞ்சுக்கணும்.” என்கின்றனர்.
புரியுது பாஸ்! ஆனாலும் மக்கள் படுற பாடு தாங்க முடியலையே. பிரச்னையை பேசி முடிச்சு ஸ்டிரைக்கை வாபஸ் வாங்கிட்டு சீக்கிரமா சொல்லுங்க ‘போலாம் ரைட்’டுன்னு.