transport employees diologe

தமிழ்நாடு போக்குவரத்து தொழிலாளர் பிரச்சனை தொடர்பாக போக்குவரத்து தொழிலாளர் நல ஆணையர் யாஸ்மின் பேகம் தலைமையில் இன்று காலை முதல் மதியம் வரை நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை. இதையடுத்து தற்போது மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மே 15-ம் தேதி முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் 1.43 லட்சம் ஊழியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஊதிய ஒப்பந்தம் போடப்பட்டு வருகிறது.

ஏற்கெனவே போடப்பட்ட 12-வது ஊதிய ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்துவிட்டது. 13-வது புதிய ஊதிய ஒப்பந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை கடந்த மார்ச் 7-ம் தேதி குரோம்பேட்டை பணிமனையில் நடந்தது.

இதில், பங்கேற்க தொழிற்சங்க நிர்வாகிகள் புதிய ஊதிய ஒப்பந்தம் போடுவதற்கு முன்பு ஏற்கெனவே போடப்பட்ட ஒப்பந்தங்களில் நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், நஷ்டத்தில் இருந்து மீட்க சிறப்பு நிதி ஒதுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.

ஆனால் இது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் தலைமையில் 3 முறை நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதையடுத்து நாளை மறுநாள் முதல் வேலை நிறுத்தப்போராட்டம் நடைபெறும் என தொழிற்சங்கங்கள் அறிவித்தன.

இந்நிலையில் இப்பிரச்சனை தொடர்பாக போக்குவரத்து தொழிலாளர் நல ஆணையர் யாஸ்மின் பேகம் தலைமையில் இன்று காலை முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து மீண்டும் நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படாததால் நாளை பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

இதனைடையே போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 8 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகை 250 கோடி ரூபாய் இன்றே வழங்கப்படும் என அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.