Traffic workers involved in road blocking at Ariyalur have arrested 150 people

அரியலூர்

தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று அரியலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் 150 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் இருந்து 2.57 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் வைத்தனர்.

அந்த கோரிக்கைகளை அதிகாரிகள் ஏற்காததால் சென்னையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் கடந்த 4-ஆம் தேதி இரவு முதல் தமிழகம் முழுவதும் அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று அரியலூர் மாவட்டம், கல்லங்குறிச்சி சாலையில் உள்ள போக்குவரத்துக் கழக கிளைப் பணிமனையில் பணியாற்றும் ஓட்டுநர், நடத்துநர்கள்ள் ஐந்தாவது நாளாக வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்தனர்.

தினசரி கூலி அடிப்படையில் கனரக வாகனங்களை ஓட்டி வருபவர்கள், கல்வி நிறுவன ஓட்டுநர்கள் ஆகியோரை வைத்து அரசு புறநகர் பேருந்துகள், நகர பேருந்துகளை பணிமனை நிர்வாக அதிகாரிகள் இயக்கினர்.

இதனையடுத்து நேற்று அரியலூர் அண்ணாசிலை அருகே போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர், அவர்கள் அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளர்கள், மறியலில் ஈடுபட்ட போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் 150 பேரை கைது செய்தனர். அவர்களை வேனில் ஏற்றி அருகில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.