சாலைமறியலில் குதித்த போக்குவரத்து தொழிலாளர்கள்! ஸ்தம்பிக்கும் சென்னை!
போக்குவரத்து தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திவருகின்றனர். இந்த நிலையில், பேச்சுவார்த்தை நடைபெறும் வரை போரட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன. தொழிற்சங்கங்களின் இந்த அறிவிப்புக்கு தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சென்னை, பல்லவன் இல்லம் எதிரே போக்குவரத்து தொழிலாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போராட்டம் தொடர்பான கருத்து வேறுபாட்டால் தொழிலாளர்களிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்வரை போராட்டத்தை தொடர வேண்டும் என்று தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். தொழிற்சங்க கொடிகளை உடைத்து எறிந்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை, பல்லவன் இல்லம் வழியாக வந்த பேருந்துகள் மீது தொழிலாளர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர்.
தொழிலாளர்களின் இந்த மறியலைத் தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பல்லவன் இல்லம் பகுதியில் சாலை மறியல் காரணமாக போக்வரத்து கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பேருந்துகளில் இருந்து பயணிகளையும் கீழே இறக்கி விடுகின்றனர் போக்குவரத்து ஊழியர்கள்.
சென்னையைத் தொடர்ந்து கடலூரிலும் போக்குவரத்து தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். கடலூரில் சாலையில் தடுப்புகளை ஏற்படுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போக்குவரத்து தொழிலாளர்களுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.