ஏற்காட்டில் பனிமூட்டம் மற்றும் சாரல் மழையால் சுற்றுலாப் பயணிகளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி...
சேலம்
சேலத்தில் உள்ள சுற்றுலாத் தலமான ஏற்காட்டில் பனிமூட்டம் மற்றும் சாரல் மழை பெய்ததால் சுற்றுலாப் பயணிகள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தனர்.
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் படகு இல்லம், ஏரி பூங்கா மற்றும் மலைப் பாதைகளில் நேற்று வழக்கத்தைவிட பனிமூட்டம் அதிகளவில் இருந்தது.இதனை, அந்தப் பகுதிகளுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.
விடுமுறை நாள்களை முன்னிட்டு வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டிற்கு வருகை தந்திருந்தனர். இவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சுற்றுலாப் பகுதிகளான ஏரி படகு இல்லம், மான் பூங்கா, ஏரி பூங்கா, அண்ணா பூங்கா, பக்கோட பார்வைமுனை, லேடிசீட், கரடியூர் பார்வைமுனை உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் அலைமோதியது.
மேலும், இங்கு பனி மூட்ட இயற்கை அழகைக் கண்டு சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பனி மூட்டத்தோடு சாரல் மழையும் பெய்ததால் சுற்றுலாப் பயணிகளுக்கு இரட்டை சந்தோசம் கிட்டியது.