நடுவழியில் இறக்கிவிட்ட தனியார் பேருந்தை உடனே சிறைப்பிடித்த சுற்றுலாப் பயணிகள்; நாங்கெல்லாம் அப்பவே அப்படி...
கோயம்புத்தூர்
கூடுதலாக செலவு செய்துவிட்டோம் என்று சப்பை கட்டு கட்டி சுற்றுலாப் பயணிகளை நடுவழியில் இறக்கிவிட்ட தனியார் பேருந்தை சிறைப்பிடித்து சுற்றுலா பயணிகள் போராட்டம் நடத்தினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப் பட்டணம் என்ற இடத்தில் இருந்து கோவையைச் சேர்ந்த ஒரு தனியார் டிராவல்ஸ் பேருந்து மூலம் தமிழ்நாடு, கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்கு ஐந்து நாள்கள் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டது.
காவேரிபட்டணம் பகுதியைச் சேர்ந்த 50 பேர் இந்த பேருந்தில் சுற்றுலாப் பயணம் மேற்கொண்ட நிலையில் பயணத்தின்போது குமுளி அருகே சுற்றுலா பேருந்து திடீரென பழுதானது.
பேருந்து பழுதடைந்ததற்கான செலவுகளை பயணம் மேற்கொண்டவர்களே செய்துள்ளனர். மேலும், 25-ஆம் தேதியில் இருந்து 29-ஆம் தேதி வரை 5 நாள்கள் சுற்றுலா என்று திட்டமிடப்பட்டு இருந்த நிலையில் மேலும் ஒரு நாள் கூடியது.
இந்த நிலையில் நேற்று கோவை வந்த சுற்றுலா பேருந்து ஓட்டுனரும், சுற்றுலா ஏற்பட்டாளர்களும் பேருந்து இதற்கு மேல் இயங்காது என்றும், அரசு பேருந்து மூலம் ஊருக்கு செல்லும்படியும் தெரிவித்தனர்.
தங்களை பாதியிலேயே இறக்கிவிட்டதால் ஆத்திரமடைந்த சுற்றுலாப் பயணிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காந்திபுரம் பேருந்து நிலையம் முன்பாக தனியார் பேருந்தை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, ஓட்டுனருக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது.
"டீசல் போட்டது, வண்டி ரிப்பேர் செலவு என 28 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து இருப்பதாகவும், சொன்னபடி ஊரில் இறக்கிவிடாமல், இங்கிருந்து போகச்சொல்வது சரியல்ல" என்றும் கூறி பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அங்கு வந்த காவலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதே தனியார் பேருந்து மூலம் மக்களை கிருஷ்ணகிரிக்கு அனுப்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்ததைத் தொடர்ந்து மக்கள் போராட்டதை கைவிட்டனர்.
சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு சுற்றுலா பயணிகளை அதே பேருந்தில் காவலாளர்கள் அனுப்பி வைத்தனர்.