ஊட்டியில் தேனீ போல குவியும் சுற்றுலாப் பயணிகள்; மூன்று நாட்களில் 45 ஆயிரத்து 746 பேர் வருகை; வியாபாரிகள் மகிழ்ச்சி...
நீலகிரி
ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவில் மூன்று நாட்களில் 45 ஆயிரத்து 746 சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து சென்றுள்ளனர். சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தொடர் விடுமுறையை அடுத்து, நீலகிரி மாவட்டம், ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, செவன்த் மைல், ரோஜா பூங்கா, படகு இல்லம், குன்னூரில் உள்ள டால்பின் நோஸ், லேம்ஸ்ராக், சூட்டிங் மட்டம், பைக்காரா, சிம்ஸ் பூங்கா, காட்டேரிப் பூங்கா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை காண்பதற்கு சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இங்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் கடந்த 22-ஆம் தேதி முதல் ஓரளவுதான் இருந்தது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தாவரவியல் பூங்காவில் உள்ள பல்வேறு வகையான மலர்களை ரசித்து செல்வது வழக்கம்.
அதன்படி, சுற்றுலா பயணிகளின் வருகை, 22-ஆம் தேதி முதல், 24-ஆம் தேதி வரை 45 ஆயிரத்து 746 ஆக இருந்தது.
சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் விதமாக தட்பவெட்ப நிலையும் அதிகாலை நேரங்களில் பனிப் பொழிவும், பகல் நேரங்களில் இதமான காற்றும் வீசும் விதமாக இருந்தது.
'புத்தாண்டு முடியும் வரை சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் குறைவாகதான் இருக்கும்" என்று பூங்கா நிர்வாகத்தினர் தெரிவித்தனர். ஆனால், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், தாவரவியல் பூங்காவில் முதல்கட்டமாக நீண்ட வாழ்நாள்களை கொண்ட சால்வியா, டேலியா, கலான்சோ, செலோசியா, கஜானியா, பிரிமூலா, கோடெட்டியா, அமரான்தஸ் ட்ரகைலர், பால்சம், பிட்டோனியா ஜெரானியம், கேலண்டுலா உள்ளிட்ட பல்வேறு வகையான மலர்ச் செடிகளை நடவு செய்ய தோட்டக் கலைத் துறையினர் திட்டமிட்டு அதற்கு உண்டான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக, சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவரும் புல்தரையை சீரமைக்கும் பணிகளில் தோட்டக் கலைத் துறையினர் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.