Totakkalvi office is THE place ARENA people in the wake of

கீழையூரில் இருக்கும் உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்தை இடமாற்றம் செய்யக் கூடாது என்று மக்கள் சாலை மறியல் போராட்டத்தை கையிலெடுத்தனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூரில் உதவி தொடக்கக்கல்வி அலுவலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

இதனை திருப்பூண்டிக்கு இடமாற்றம் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும்,

கீழையூரில் இருந்து திருப்பூண்டிக்கு மாற்றப்பட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை மீண்டும் கீழையூருக்கு கொண்டு வர வேண்டும்,

போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கீழையூரைச் சேர்ந்த மக்கள் கீழையூர் கடைத் தெருவில் நாகை - திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தை நடத்தினர்.

இதுபற்றி தகவலறிந்ததும் ஓடிவந்த உதவி தொடக்கக்கல்வி அலுவலர் மணிகண்டன், தாசில்தார் மணிவண்ணன், கீழையூர் காவல் ஆய்வாளர் விவேகானந்தன், உதவி ஆய்வாளார் வீரம்மாள் உள்ளிட்டோர் சாலை மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

“நாகை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரின் முயற்சியின்படி கீழையூர் உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்திற்கு இணையதள வசதி பெறுவதற்கு நிதிஒதுக்கீடு ஆணை பெறப்பட்டது. இந்த இணையதள வசதி பெறுவதற்கு நாகை பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை அணுகியபோது திருப்பூண்டி தொலைபேசி இணைப்பகத்தில் இருந்து கீழையூர் அலுவலகம் 8 கிலோமீட்டர் தொலைவு உள்ளது. இதனால் இணையதள வசதி அளிப்பதற்கு சுமார் ரூ.1 இலட்சத்து 25 ஆயிரம் செலவு ஆகும் என்று எழுத்து பூர்வமாக தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து கீழையூர் ஒன்றியத்தில் உள்ள அனைத்து தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் இணையதள வசதி பெறுவதற்காக தற்காலிகமாக திருப்பூண்டிக்கு உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்தை மாற்றுவதாக முடிவு செய்யப்பட்டது. ஆனால், தற்போது கீழையூர் மக்களின் நலன் கருதி இந்த அலுவலகம் தொடர்ந்து கீழையூரிலேயே இயங்கும் எனவும், இணையதள வசதி பெறுவதற்கான ஏற்பாடுகளை மக்களுடன் இணைந்து செயல்படுத்த வேண்டும்” என்றும் அதிகாரிகள் உறுதியளித்தனர்.

இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள் மறியலை கைவிட்டு வீடு திரும்பினர்.