கனமழை எதிரொலி… ஐந்து மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!! | Tamilnadu Rain
#Tamilnadu Rain | வடகிழக்குப் பருவமழை காரணமாக சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழை காரணமாக சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நாளை அதிகாலை சென்னை-புதுச்சேரி இடையே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் நாளை தமிழகம் முழுவதும் கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாள் முதல் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வந்தது. பின்னர் அது தீவிரமடைந்ததை அடுத்து பெரும்பாலான பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் பல பகுதிகளில் நீர் நிலைகள் நிரம்பி வெள்ளம் ஏற்பட்டது. விடாது பெய்த மழை காரணமாக சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது.
இன்று காலை நிலவரப்படி, சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 340 கி.மீ., தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மையம் கொண்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் கூறப்பட்டது. ஆனால், அதற்கு முன்பாகவே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தீவிரமடைந்துள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து நாளை அதிகாலை சென்னை அருகே கரையை கடக்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் தீவிர மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை சென்னைக்கு அருகில் கரையை கடக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, சேலம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய 16 மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் வடகிழக்குப் பருவமழை காரணமாக சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை சென்னை, திருப்பத்தூர், வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்கள் அறிவித்துள்ளனர். மேலும், மாணவர்களை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வர கட்டாயப்படுத்தக் கூடாது எனவும் பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.