திருப்பூர்
ஏற்கனவே திட்டமிட்டபடி, திருப்பூர் மாவட்டத்தில் இன்று கடையடைப்பு மற்றும் வேலை நிறுத்தம் நடக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சித் தெரிவித்துள்ளது.
“மத்திய அரசு, பழைய 500 மற்றும், 1000 ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30 வரை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். வேளாண் கூட்டுறவு சங்கங்களிலும், பண பரிவர்த்தனைக்கு அனுமதிக்க வேண்டும் என்று ஒரு சில அரசியல் கட்சியினரும், தொழிற்சங்கங்களும் ஆங்காங்கே வலியுறுத்தி வருகின்றன.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூரில் இன்று கடையடைப்பு மற்றும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு, தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, காங்கிரஸ் போன்ற அரசியல் கட்சிகளும், தொழிற்சங்கங்களும் அழைப்பு விடுத்துள்ளன.
இன்று காலை, 10:00 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டு இருந்தது. ஏற்கனவே அறிவித்தபடி, இன்று வேலை நிறுத்தம், கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் சின்னசாமி வெளியிட்ட அறிக்கையில், "ஒரு சில அரசியல் கட்சிகள், சுயநலத்திற்காக முழு அடைப்பு என்ற பெயரில் கடையடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன.
இன்று நடக்கும் முழுஅடைப்பு போராட்டத்தில், பா.ஜ.க பங்கேற்காது. பிரதமர் எடுத்துள்ள கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கைக்கு, பொதுமக்கள், வர்த்தக நிறுவனங்கள் ஆதரவளிக்க வேண்டும்' என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்..
