இன்று முதல் தொடங்குகிறது ரேஷன் அட்டைகளில் உள்தாள் இணைக்கும் பணி…
தேனி,
தேனி மாவட்டத்தில் ரேஷன் அட்டைகளில் உள்தாள் இணைக்கும் பணி இன்று முதல் தொடங்குகிறது.
தமிழகம் முழுவதும் ரேஷன் அட்டைகளை, ஸ்மார்ட் அட்டையாக வழங்க தேவையான நடவடிக்கைகளை அரசு தாமதமாக மேற்கொண்டு வருகிறது. தற்போது ரேஷன் அட்டையுடன் ஆதார் அடையாள அட்டை எண், செல்போன் எண் போன்றவற்றை இணைக்கும் பணிகள் நடைப்பெற்று வருகிறது. அதற்கான பணிகளும் நடந்து வந்தன.
தேனி மாவட்டத்தில் சுமார் 80 சதவீதம் ரேஷன் அட்டைகளுடன் ஆதார் அடையாள எண் இணைக்கப்பட்டு விட்டது. ஆதார் எண் இணைக்காத கார்டுகளுக்கு ரேஷன் பொருட்கள் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.
விற்பனை நிறுத்தம் செய்யப்பட்ட அட்டைதாரர்கள் தங்களின் ரேஷன் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்து மீண்டும் தங்களின் கார்டு மூலம் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், தற்போது பயன்பாட்டில் உள்ள ரேஷன் அட்டைகள் கடந்த 2005–ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் உள்தாள் இணைக்கப்படுவதை வழக்கமாக கொண்டு வருகிறது தமிழக அரசு.
தற்போது மேலும் ஆறு மாதங்களுக்கு இந்த ரேஷன் அட்டைகளை பயன்படுத்தும் வகையில் உள்தாள் இணைக்கும் பணியைத் தொடங்க அரசு உத்தரவிட்டு மும்முரமாக செயல்பட உள்ளது.
அதன்படி உள்தாள் இணைக்கும் பணி தேனி மாவட்டம் முழுவதும் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இந்த பணி வருகிற 31–ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. மாவட்டம் முழுவதும் சுமார் 4 இலட்சத்து 15 ஆயிரம் ரேஷன் அட்டைகளுக்கு உள்தாள் இணைக்கப்பட உள்ளது.
இதற்குத் தேவையான உள்தாள்களை ரேஷன் கடைகளுக்கு பிரித்து வழங்கும் பணி நடந்து வருகிறது. எனவே, ரேஷன் அட்டைதாரர்கள் தங்களின் ரேஷன் அட்டை தாங்கள் பொருட்கள் வாங்கும் ரேஷன் கடைக்கு எடுத்துச் சென்று உள்தாள் இணைத்துக் கொள்ளலாம்.