முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் அசாதாரணமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

தமிழகத்தில் முதல்வர் பற்றிய வதந்திகள் வேகமாக பரவியதை அடுத்து பொதுமக்கள் பதற்றத்தில் உள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு அதிமுக எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் அனைவரும் அப்போலோ வர உத்தரவிடப்பட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் கிளம்பிய நிலையில் விரைவாக குணமடைந்து வந்தார். விரைவில் அவர் டிஸ்சார்ஜ் ஆவார். டிஸ்சார்ஜ் தேதியையும் அவரே முடிவு செய்வார் என்று அப்போலோ மருத்துவக் குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்து இருந்தார்.

முதல்வருக்கு அனைத்து சிகிச்சைகளும் முடிவடைந்த நிலையில் பிசியோதெரபி சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்த நிலையில் ஓரிரு நாளில் டிஸ்சார்ஜ் ஆவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று மாலை முதல்வருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து இதயநோய், சுவாசவியல் மற்றும் தீவிர சிகிச்சை நிபுணர்கள் அடங்கிய குழு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தது. நேற்று முதல்வருக்கு சிறிய அளவிலான அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.

முதல்வர் உடல்நிலையொட்டி எழுந்துள்ள பிரச்சனைகள், தமிழக்த்தின் சட்ட ஒழுங்கு, அடுத்த கட்டமாக தமிழக்த்தில் எழுந்துள்ள பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்வது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக அதிமுக எம்,எல்.ஏக்கள், அமைச்சர்கள் அனைவரையும் இன்று காலை 11 மணிக்கு அப்போலோ மருத்துவமனைக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, வெளியூரில் உள்ள எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் அவசர அவசரமாக சென்னை திரும்பி வந்தனர்.