சென்னையில் 22 காரட் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.1,136 குறைந்து ரூ.38,472க்கு விற்பனையாகிறது. 

சென்னையில் 22 காரட் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.1,136 குறைந்து ரூ.38,472க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கடந்த 2020 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே உயர்ந்து வந்தது. ஒவ்வொரு நாளும் விலை உயர்ந்து வந்தது. கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7ஆம் தேதி ஒரு பவுன் ரூ.43 ஆயிரத்து 328க்கு விற்பனையானது. இது தான் தங்கம் விலையில் வரலாறு காணாத உச்சமாக பார்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தங்கம் விலையில் சற்று சரிவை பார்க்க முடிந்தது. தொடர்ந்து அதன் விலை சரிந்து கொண்டே வந்து, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 4ம் தேதி மீண்டும் உயரத் தொடங்கியது. அன்றைய தினம் ஒரு சவரன் ரூ.38 ஆயிரத்து 520க்கும் விற்பனை செய்யப்பட்டது.

அதன்பின்னர், ஜனவரி 6ஆம் தேதி மீண்டும் அதிகரித்து, ஒரு சவரன் ரூ.39 ஆயிரத்தை கடந்தது. அதையடுத்து தங்கம் விலை குறையத் தொடங்கியது. தொடர்ந்து விலை இறங்குமுகத்தில் காணப்பட்டாலும், அவ்வப்போது விலையில் ஏற்றம் இருந்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு சவரன் தங்கம் ரூ.36 ஆயிரத்து 472 என்ற நிலையில் இருந்து, ஏற்ற, இறக்கத்துடனேயே நீடித்து வந்தது. இந்த நிலையில் உக்ரைன் மீது ரஷியா எந்த நேரத்திலும் தாக்குதல், போர் தொடுக்கலாம் என்ற சூழல் இருந்ததால், கடந்த வாரத்தில் இருந்து தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியது. நேற்று உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்த தொடங்கிய சில மணி நேரத்திலேயே தங்கம் விலையில் பெரிய மாற்றம் காணப்பட்டது.

நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.232ம், சவரனுக்கு ரூ.1,856ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 951க்கும், ஒரு சவரன் ரூ.39 ஆயிரத்து 608க்கும் விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை நேற்று ஒரே நாளில் மட்டும் பவுனுக்கு ரூ.1,856 உயர்ந்தது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. 22 காரட் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.1,136 குறைந்து ரூ.38,472க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.142 குறைந்து ரூ.4,809 ஆக விற்பனையாகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.2.70 சரிந்து ரூ.70க்கு விற்பனையாகிறது. ரஷியா மீது கூடுதல் பொருளாதார தடை விதித்ததன் எதிரொலியாக தங்கம், வெள்ளி விலை குறைந்துள்ளது.