அமைப்பு சாரா தொழிலாளருக்கும் கல்வி, ஓய்வூதியம் வழங்க வேண்டும் - பாரதிய மஸ்தூர் சங்கம் ஜனவரி 2-ஆம் தேதி ஆர்ப்பாட்டம்...
கரூர்
அமைப்பு சாரா தொழிலாளருக்கு வழங்க வேண்டிய கல்வி, ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ஜனவரி 2-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பாரதிய மஸ்தூர் சங்கத்தின் மாவட்ட மாநாட்டின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கரூர் மாவட்டம், வெங்கமேட்டில் பாரதிய மஸ்தூர் சங்கத்தின் 4-வது மாவட்ட மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு, கரூர் மாவட்ட தலைவர் ஏ.வி.பன்னீர் செல்வம் தலைமை வகித்தார்.
மாவட்ட துணை த லைவர் ரவி, புவனேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் சந்தான கிருஷ்ணன் கொடியேற்றி வைத்தார். மகளிர் அணி அமைப்பாளர் கிருஷ்ணவேணி குத்துவிளக்கேற்றினார். மாநில துணை பொதுச்செயலாளர் சிதம்பரசாமி உரையாற்றினார்.
இந்தக் கூட்டத்தில், "அமைப்பு சாரா தொழிலாளருக்கு வழங்க வேண்டிய கல்வி, ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும் என்று வரும் ஜனவரி 2-ஆம் தேதி நல வாரியம் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்" என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் மாநில செயற் குழு உறுப்பினர் வெண்ணிலா, மாவட்ட குழு உறுப்பினர் பரேமஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.