குரூப்-2, 2ஏ தேர்வு தேதி குறித்து முக்கிய அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி நாளை வெளியிட உள்ளது.
தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் அனைத்து போட்டித்தேர்வுகளிலும் தமிழ் மொழித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வில் 100 மதிப்பெண்களுக்குத் தேர்வுகள் நடைபெறும். இத்தேர்வில் 40 மதிப்பெண்கள் பெற்றவர்கள் மட்டுமே அடுத்தகட்ட தேர்விற்கு எடுத்துக்கொள்ளப்படுவர் என்று அறிவிக்கப்பட்டது.
அதேபோல தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளின் நேரமும் மாற்றப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் தேர்வுகள் அனைத்தும் இனிவரும் காலங்களில் காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறும். அதேபோல பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்வு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
தேர்வு எழுதுபவர்கள் தேர்வு மையத்திற்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தினை விட 30 நிமிடத்திற்கு முன்னதாகவே வருகைபுரிய வேண்டும். அவ்வாறு வருகை தராதவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் இனிவரும் காலங்களில் நடைபெறும் போட்டித்தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்களின் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே இதுவரை ஆதார் எண்ணைப் பதிவு செய்யாதவர்கள் பிப். 28-ம் தேதிக்குள் ஆதார் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் இந்த ஆண்டு 32 வகையான தேர்வுகளை நடத்திட திட்டமிடப்பட்டு வருகிறது. குறிப்பாக குரூப்-1 தேர்வுகளை மே மாதம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. குரூப்-2, குரூப்- 2 ஏ தேர்விற்கான அறிவிப்பு இம்மாதத்திலேயே வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. குரூப்- 4 தேர்வு குறித்து மார்ச் மாதத்தில் அறிவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வாறு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 75 நாட்களில் தேர்வுகள் நடத்தப்படும்.
அதன்படி 2022ஆம் ஆண்டு நடைபெற உள்ள டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுக்கான அட்டவணை நாளை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான அறிவிப்பைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பாலச்சந்திரன், நாளை (பிப்.18) மதியம் அறிவிக்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் 2 -வில் மொத்தம் 5,831 காலிப்பணியிடங்கள் இருப்பதாக ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி தலைவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருந்தார். இந்த காலிப்பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தார்.குரூப் 2 தேர்வை எழுத உள்ளோர் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். தற்போது இறுதி ஆண்டு படிப்பவர்களும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். டிஎன்பிஎஸ்சி குரூப் -2 கீழ் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மூன்று நிலைகளின் கீழ் தேர்வு செய்யப்படுகின்றனர்.
