TNPSC : 2022 இல் குரூப் 2, குரூப் 4 தேர்வுகள்.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...
‘தமிழகத்தில் வரும் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் குரூப் 2 தேர்வும் மார்ச் மாதம் குரூப் 4 தேர்வும் நடைபெறும்’ என டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்கள், அலுவலர்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்கான போட்டித் தேர்வுகள் மற்றும் நேர்காணல் தேர்வுகளை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தி வருகிறது. இந்த நிலையில்,டிஎன்பிஎஸ்சி நடத்தும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் , தமிழ் மொழிதேர்வை கட்டாயப்படுத்தி தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்னர் அரசாணை வெளியிட்டது.
இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக டிஎன்பிஎஸ்சி குரூப் 2,குரூப் 2 A தேர்வுகள் நடத்தப்படாத நிலையில் குரூப் 2 தேர்வுகள் பிப்ரவரியில் நடத்தப்படும் என்றும், குரூப் 4 தேர்வுகள் மார்ச் மாதம் நடத்தப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார். மேலும், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும், அறிவிப்பு வெளியான 75 நாட்களில் தேர்வு நடைபெறும் என்றும் கூறினார். மேலும், குரூப் 2 பிரிவில் 5831 பணியிடங்கள் மற்றும் குரூப் 4 பிரிவில் 5255 பணியிடங்கள் காலியாக உள்ளது.
அதுமட்டுமின்றி, அடுத்த ஆண்டு 32 வகையான தேர்வுகள் நடத்தப்படும்.டிஎன்பிஎஸ்சி தேர்வு தாள்களை கொண்டு செல்லும் வாகனங்கள் ஜிபிஎஸ்மூலம் கண்காணிக்கப்படும்.தேர்வு முறைகேடுகள் குறித்த வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறினார். டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், யார் தேர்வு எழுதியது என்று தெரியாத அளவிற்கு வரும் காலங்களில் முக்கியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என்றும் கூறினார்.