பாலுக்கான கொள்முதல் விலையை தமிழக அரசு உயர்த்த வேண்டும் – திருச்சியில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்…
திருச்சி
பாலுக்கான கொள்முதல் விலையை தமிழக அரசு உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொட்டியம் தாலுகா அலுவலகம் முன்பு பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத் திருச்சி மாவட்ட குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்திற்கு மாவட்டக் குழு உறுப்பினர் முருகானந்தம் தலைமை வகித்தார். சுந்தரராஜன், பாலகிருஷ்ணன், பெரியசாமி ஆகியோர் பேசினர். தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநிலச் செயலாளர் ராமநாதன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சிதம்பரம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றுப் பேசினர்.
“பாலுக்கான கொள்முதல் விலையை பசும்பாலுக்கு லிட்டருக்கு 35 ரூபாயும், எருமை பாலுக்கு லிட்டருக்கு 45 ரூபாயும் என தமிழக அரசு உயர்த்தி அறிவிக்க வேண்டும்,
பால் உற்பத்தியாளர்களுக்கு தீவனங்களை 50 சதவீத மானிய விலையில் வழங்க வேண்டும்,
தமிழக அரசு ஒரு லிட்டர் பாலுக்கு ஊக்கத் தொகையாக ரூ.4 வழங்க வேண்டும்” உள்ளிட்ட பல்வேறுக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைப்பெற்றது.
இந்தப் போராட்டத்தில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான பால் உற்பத்தியாளர்கள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.