தமிழ்நாட்டில் மின்சார வாகனப் பயன்பாட்டை ஊக்குவிக்க, புதிய குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களில் சார்ஜிங் வசதி அமைப்பதை தமிழக அரசு கட்டாயமாக்கியுள்ளது. எட்டு வீடுகளுக்கு மேலான குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு இந்த புதிய விதி பொருந்தும்.

தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களின் (EV) பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில், புதிய குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களில் சார்ஜிங் வசதியை அமைப்பது கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான விதிகளைத் திருத்தி, அரசிதழில் வெளியிட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த அதிரடி நடவடிக்கை, மின்சார வாகனப் பயன்பாட்டிற்கான உள்கட்டமைப்பை விரைந்து உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசின் அறிவிப்பின்படி, புதிதாகக் கட்டப்படும் குடியிருப்புகளுக்கான திருத்தப்பட்ட விதிகள் பின்வருமாறு:

குடியிருப்புகளில் மின்சார வாகன சார்ஜிங் வசதி

எட்டு வீடுகளுக்கு மேலான அல்லது 750 சதுர அடி மீட்டருக்கு அதிகமான பரப்பளவில் கட்டப்படும் அனைத்து புதிய குடியிருப்புகளிலும் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் வசதி கட்டாயம் இருக்க வேண்டும்.

பெரிய அடுக்குமாடி குடியிருப்புகள்: 50 வீடுகளுக்கும் அதிகமான பெரிய குடியிருப்புத் திட்டங்களாக இருந்தால், அங்கே குடியிருப்பில் வசிப்போருடன், வெளியில் இருந்து வருவோரும் பயன்படுத்தும் வகையில் பொதுவான ரீசார்ஜிங் வசதியை ஏற்படுத்துவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வணிக நிறுவனங்களிலும் கட்டாயம்

குடியிருப்புப் பகுதிகளைத் தொடர்ந்து, வணிக மற்றும் தொழில் நிறுவனங்களிலும் இந்த புதிய விதி அமல்படுத்தப்பட்டுள்ளது.

வணிக வளாகங்கள் மற்றும் தொழிற்சாலைகள்: 300 சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் உள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிக வளாகங்களில் மின் வாகன ரீசார்ஜிங் வசதியை அமைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

புதிய விதியின் நோக்கம்

தமிழக அரசின் இந்த புதிய விதித்திருத்தங்களின் முக்கிய நோக்கம், மின்சார வாகனப் பயன்பாட்டை மாநிலம் முழுவதும் ஊக்குவிப்பதும், வாகன ஓட்டிகளுக்குத் தேவையான சார்ஜிங் உள்கட்டமைப்பை எளிதில் அணுகுவதற்கு உறுதிப்படுத்துவதுமாகும்.

அரசின் இந்த முன்னோடி நடவடிக்கை, எதிர்காலத்தில் மின் வாகனங்களின் விற்பனை மற்றும் பயன்பாட்டை மாநில அளவில் கணிசமாக உயர்த்தும் என தொழில் மற்றும் சுற்றுச்சூழல் வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.