ரகசியமாக பேருந்துகளின் எண்ணிக்கையை குறைத்த தமிழக அரசு… வெறுப்பில் பொதுமக்கள்…
சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பேருந்துகளின் எண்ணிக்கையை தமிழக அரசு திடீரென குறைத்துவிட்டதால் பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் காலை, மாலை நேரங்களில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளின் எண்ணிக்கை திடீரென் குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று திரும்பும் மாணவர்களும் அலுவலகங்களுக்குச் சென்று வருபவர்களும் பெரும் அலைச்சலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
சென்னை புறநகர் பகுதிகளான மணலி, எண்ணூர், மாதவரம், அம்பத்தூர், ஆவடி, பொன்னேரி, மீஞ்சூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னை நகருக்கு வருபவர்கள் பலரும் உரிய நேரத்தில் பேருந்து கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதே போன்று வட மாவட்டங்களிலும் பேருந்துகளின் எண்ணிக்கையை தமிழக அரசு குறைத்துவிட்டதால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அரசு பேருந்துகள் குறித்த நேரத்தில் இயங்குவதில்லை என்ற புகார் தொடரும் நிலையில் இயக்கப்படும் பேருந்துகளையும் குறைத்துவிட்டால் பொதுமக்களின் நிலை பெரும் திண்டாட்டம் ஆகிவிடும் என்று பொது மக்கள் புலம்புகின்றனர்.