CDS Bipin Rawat:ஆளுநர் ஆர்.என்.ரவி அஞ்சலி.. ஒன்றாக பணியாற்றிய தருணங்களை பகிர்ந்துக்கொண்டு உருக்கம்..
குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் படத்துக்கு திருச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அஞ்சலி செலுத்தினார்.
இராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி ,அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்த சம்பவம் தேசத்தையே சோகத்தில் ஆழ்ந்தியுள்ளது. இன்று வெலிங்டன் ராணுவ மையத்தில் ஜெனரல் பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்களுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், தெலுங்கானா-புதுவை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக அமைச்சர்கள் பங்கேற்றனர். ராணுவ அதிகாரிகளும் ஜெனரல் பிபின் ராவத் உள்ளிட்டோர் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
இதனிடையே இன்று திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் 37-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். பின்னர், பாரதிதாசன் பல்கலைக் கழக வளாகத்தில் ஜெனரல் பிபின் ராவத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, ஜெனரல் பிபின் ராவத் படத்துக்கு மலர் வளையம் வைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் பொன்முடி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோரும் கலந்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, நாட்டின் முப்படைகளின் தலைமை தளபதியாக பணியாற்றிய காலத்தில் திடமான முடிவுகளை எடுத்தவர் ஜெனரல் பிபின் ராவத் என்று கூறினார். அவருடன் பிரதமர் அலுவலகத்தில் ஒன்றாக பணிபுரிந்துள்ளதாக நினைகூர்ந்தார்.
மேலும் பேசிய அவர், 2017 ஆம் ஆண்டு திபெத் எல்லையில் சீனா ஊடுருவ முயன்றபோது அந்த ராணுவத்தை பின்வாங்க வைக்கும் வகையில் தந்திரமான முடிவுகளை எடுத்தவர். நமது தேசம் மிகச் சிறந்த ராணுவ வீரரை இழந்துவிட்டது. முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் பணி மகத்தானது. அவரது மறைவு மிகப் பெரும் இழப்பாகும். எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து நேற்று காலை 10.30 மணிக்கு நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்துக்கு சென்ற Mi-17V5 ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். கேப்டன் வருண் சிங் 80 சதவீதத் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் 14 உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதை அடுத்து ஜெனரல் பிபின் ராவத்தின் மறைவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள், மாநில ஆளுநர்கள் உள்ளிட்டோர் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தனர். மேலும் நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் உயிரிழந்த ஜெனரல் பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேருக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதிநவீன ஹெலிகாப்டர் வகையைச் சேர்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது எப்படி, தொழில்நுட்ப கோளாறு அல்லது கடும் பனிமூட்டம் ஆன மோசமான வானிலை காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணையில் தெரிய வரும் என்று கூறப்படுகிறது . இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் விமானப்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.