சாலை விபத்தில் உயிரிழப்பை குறைக்க தமிழக அரசின் புதிய திட்டம் - வேலூரிலும் செயல்படத் தொடங்கியது...
வேலூர்
தமிழகத்து சாலைகளில் நடக்கும் உயிரிழப்புகளை குறைக்க முதலமைச்சரால் தொடங்கப்பட்ட "தமிழ்நாடு விபத்து மற்றும் அவசரக் கால சிகிச்சைத் திட்டம்" வேலூரிலும் செயல்படுத்தப்பட்டுள்ளது.
சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்க "தமிழ்நாடு விபத்து மற்றும் அவசரக் கால சிகிச்சைத் திட்டம்" நேற்று தொடங்கப்பட்டது.
வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் தொடங்கப்பட்ட இந்த விழாவில் மாவட்ட ஊரக சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் யாஸ்மின் தலைமை வகித்தார்.
இதில் அவர் பேசியது: "சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்க நவீன மருத்துவ கருவிகள் உள்ளிட்ட வசதிகளுடன் "தமிழ்நாடு விபத்து மற்றும் அவசரக் கால சிகிச்சைத் திட்டம்" செயல்படுத்தப்படும் என்று சட்டப் பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
அதன்படி, தமிழக மருத்துவ பணிகள் துறை இயக்குநர் தாரேஷ் அகமத் வழிகாட்டுதலின்படி முதன்முறையாக சென்னை இராஜூவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
பின்னர் இத்திட்டம் தமிழகம் முழுவதும் 14 இடங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அரசு மருத்துவமனைகளில் செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்பேரில் வாலாஜாபேட்டை அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையில் செயல்படுத்தப்பட்டு உள்ளது.
சாலை விபத்துகள், மாரடைப்பு, தீக்காயம், விஷம் குடித்தல் போன்ற மிகவும் ஆபத்தான, உயிருக்குப் போராடும் நிலையில் வருவோரைக் காப்பாற்ற இத்திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இங்கு 24 மணிநேரமும் மருத்துவர், செவிலியர் பணியில் ஈடுபடுவர்.
ஒரு வருடத்திற்கு மட்டும் தமிழகத்தில் 17 ஆயிரம் பேர் சாலை விபத்தில் மடிகின்றனர் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதனை குறைக்க இத்திட்டம் உதவும்" என்ற அவர் பேசினார்.