தமிழக காவல்துறையில் சிறப்பாக செயல்பட்ட 4,000 காவலர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்த முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் மற்றும் தொழில்நுட்ப மற்றும் சிறப்புப் பணி சேவைகள் ஆகிய துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தமது பணியில் வெளிப்படுத்தும் நிகரற்ற செயல்பாட்டினை அங்கீகரித்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளன்று தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன.

காவல்துறையினருக்கு பதக்கங்கள்

இந்த ஆண்டு காவல் துறையில் (ஆண்/பெண்) காவலர் நிலை-2. காவலர் நிலை-1, தலைமைக் காவலர் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் நிலைகளில் 4000 பணியாளர்களுக்கு தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கங்கள் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சிறப்பு பணிப்பதக்கங்கள்

மேலும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் முன்னணி தீயணைப்போர், இயந்திர கம்மியர் ஓட்டி, சிறப்பு நிலைய அலுவலர் (போக்குவரத்து). இயந்திர கம்மியர் ஓட்டி, தீயணைப்போர் ஓட்டி (தரம் உயர்த்தப்பட்ட இயந்திர கம்மியர் ஓட்டி) மற்றும் தீயணைப்போர் (தரம் உயர்த்தப்பட்ட முன்னணி தீயணைப்போர்) ஆகிய நிலைகளில் 120 அலுவலர்களுக்கும், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையில் முதல் நிலை வார்டர்கள் (ஆண்). முதல் நிலை வார்டர்கள் (பெண்), இரண்டாம் நிலை வார்டர்கள் (ஆண்) மற்றும் இரண்டாம் நிலை வார்டர்கள் (பெண்) நிலைகளில் 58 அலுவலர்களுக்கும் தமிழக முதலமைச்சரின் சிறப்பு பணிப்பதக்கங்கள் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

மாதாந்திர பதக்கப்படி வழங்கப்படும்

இந்த பதக்கங்கள் பெறுபவர்களுக்கு நிலைவேறுபாடின்றி மாதாந்திர பதக்கப்படி 2026 பிப்ரவரி 1-ம் தேதி முதல் வழங்கப்படும். மேலும், காவல் வானொலி பிரிவு, மோப்ப நாய் படைப் பிரிவு மற்றும் காவல் புகைப்படக் கலைஞர்கள் பிரிவுகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் ஒவ்வொரு பிரிவிலும் 2 நபர்கள் வீதம் பெயந்தம் 6 அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு தமிழக முதலமைச்சரின் காவல் தொழில்நுட்ப மற்றும் சிறப்புப் பணிப் பதக்கம் வழங்கவும் முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

ரொக்க தொகை வழங்கப்படும்

இப்பதக்கங்கள் பெறும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு அவரவர்களின் நிலைகளுக்குத் தக்கவாறு ரொக்க தொகை வழங்கப்படும். மேற்கண்ட அனைவருக்கும் பின்னர் நடைபெறும் சிறப்பு பதக்க அணிவகுப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் கையொப்பத்துடன் கூடிய பதக்கச்சுருள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.