டெல்லி சேவைகள் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறிய நாள் பாஜகவின் பாசிசம் அரங்கேறிய கறுப்பு நாள் என முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்

டெல்லி அரசு அதிகாரிகளை கட்டுப்படுத்தும் வகையிலான அவசர சட்டத்தை மத்திய அரசு இயற்றியுள்ளது. இந்த சட்டத்தின்படி துணை நிலை ஆளுநருக்கு மட்டுமே அதிகாரிகளை மாற்றும், நியமிக்கும் அதிகாரம் இருக்கும். டெல்லியில் அதிகார மையத்தை மத்திய அரசு தங்களது கட்டுக்குள் கொண்டு வரும் வகையிலான இந்த சட்டத்தை ஆம் ஆத்மி கடுமையாக எதிர்த்து வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த மசோதாவை எதிர்க்குமாறு எதிர்க்கட்சிகளுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார். அதனை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக் கொண்டு தெரிவித்துள்ளன.

இருப்பினும், டெல்லி அதிகாரத்தை கட்டுப்படுத்தும் சர்ச்சைக்குரிய மசோதாவை நாடாளுமன்ற இரு அவைகளிலும் மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது. டெல்லியின் தேசிய தலைநகர் பிரதேச அரசு (திருத்தம்) மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த 2ஆம் தேதி மக்களவையில் அமித் ஷா தாக்கல் செய்தார். அந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் கடந்த 3ஆம் தேதி நிறைவேறியது. அதன் தொடர்ச்சியாக, 131 எம்.பி.க்களின் ஆதரவுடன் மாநிலங்களவையிலும் அந்த மசோதா நேற்று நிறைவேறியது.

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்: இன்று தொடங்குகிறது விவாதம்!

இதற்கு, நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், டெல்லி சேவைகள் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறிய நாள் பாஜகவின் பாசிசம் அரங்கேறிய கறுப்பு நாள் என முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “தலைநகர் டெல்லியை ஒரு மாநகராட்சியைப் போலத் தரம் குறைக்கும் Delhi Services Bill மாநிலங்களவையில் நிறைவேறிய நேற்றைய நாள், மக்களாட்சியின் கறுப்பு நாள். எதிர்க்கட்சி ஆட்சி செய்தால் அந்த மாநிலத்தைக் கூடச் சிதைப்போம் என்ற பாஜகவின் பாசிசம் அரங்கேறிய நாளை வேறு என்ன சொல்வது?

29 வாக்குகள் வித்தியாசத்தில் ஒரு நாட்டின் தலைநகரையே தரைமட்டத்துக்குக் குறைத்த சதிச் செயலுக்கான தண்டனையை டெல்லி மாநில மக்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய மக்களும் விரைவில் தருவார்கள்.

Scroll to load tweet…

மூன்று மாதமாக Manipur எரிகிறது. அதை அணைக்க முடியாமல், டெல்லியைச் சிதைக்கத் துடிக்கும் பா.ஜ.க.வின் தந்திரங்களை மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாநில முதலமைச்சரின் அதிகாரத்தைக் குலைக்கும் இந்த மசோதாவை, பேரறிஞர் அண்ணாவின் பெயரால் கட்சி நடத்தும் அடிமைக் கூட்டம் ஆதரித்து மாநிலங்களவையில் வாக்களித்திருப்பது எனக்கு அதிர்ச்சியளிக்கவில்லை.

"நான் யாருக்கும் அடிமையில்லை" என்றபடியே, பா.ஜ.க.வின் பாதம் தாங்கி, "கொத்தடிமையாக" தரையில் ஊர்ந்து கொண்டிருக்கிறார் பழனிசாமி என்பதையே இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.” என்று பதிவிட்டுள்ளார்.