tmk Struggle for dismiss the entire agricultural loan

சேலம்

மத்திய அரசு, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் வழங்கிய விவசாய கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று த.மா.கா.வினர் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர்.

விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் விவசாயிகள் அணியின் மாநிலத் தலைவர் நாகராஜன், மாநிலத் துணைத்தலைவர் கந்தசாமி, மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் செல்வம், சேலம் மாவட்டத் தலைவர்கள் ரவிவர்மா, சுசீந்திரகுமார், மேற்கு மாவட்டத் தொழிற்சங்கத் தலைவர் சின்னையன், ஓமலூர் வட்டாரத் தலைவர் ராஜேந்திரன், மாவட்ட விவசாய அணித் தலைவர் அபிமன்னன் உள்பட தமிழ் மாநில காங்கிரசார் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டனர்.

பின்னர் அவர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த நகர காவல் ஆய்வாளர் குமரேசன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினார். பின்னர், த.மா.கா.வினர் ஆட்சியர் சம்பத்திடம் மனுக் கொடுத்தனர்.

இதுகுறித்து மாநில விவசாயிகள் அணியின் தலைவர் நாகராஜன் கூறியது:

“மேட்டூர் அணையில் வணிக நோக்கத்திற்காக வண்டல் மண் அள்ளுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

அணையில் இருந்து வரும் உபரிநீரை வசிஷ்ட நதி மற்றும் சுவேத நதிகளில் திருப்பிவிட்டால் சேலம், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள் பாசன வசதி பெறும்.

ஜூன் மாதம் முடிய கர்நாடகம் தர வேண்டிய 20.5 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாக மத்திய அரசு பெற்று தர வேண்டும்.

மத்திய அரசு, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் வழங்கிய விவசாய கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

கூட்டுறவு வங்கிகள் விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என மதுரை நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது. இதுதொடர்பாக தமிழக அரசு செய்த மேல் முறையீட்டு மனுவை திரும்ப பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், மாட்டு இறைச்சிக்கான தடையை எவ்வித நிபந்தனையும் இன்றி மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்” என்று கூறினார்.