Tiruvannamalai district collector who sat on his car seat s girl student and bless

நீயும் கலெக்டராக வேண்டும்…. மாணவியை தனது கார் சீட்டில் அமர வைத்து வாழ்த்திய திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் !!!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

கலெக்டராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்த மாணவி ஒருவருக்கு வாழ்த்துத் கூறிய திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர், அந்த மாணவியை காரில் தனது இருக்கையில் அமரவைத்து ஊக்கப்படுத்திய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் சிப்காட் லோட்டஸ் நிறுவனம் சார்பில் கல்வி துறைக்கு பல நலதிட்டங்கள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது.

அந்த விழாவில் செய்யார் அரசு மகளிர் மேனிலைப் பள்ளி 11ஆம் வகுப்பு மாணவி மோனிஷா 10ஆம் வகுப்பில் 491 மதிப்பெண் பெற்றதை பாராட்டி கல்வி உதவி தொகையை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அந்த மாணவிக்கு வழங்கினார். 

அப்போது மாணவி மோனிஷா அந்த ஆட்சியரிடம், "இன்று உங்கள் கையால் பரிசு வாங்கும் நான்... படித்து உங்களை போல மாவட்ட ஆட்சியர் ஆக போகிறேன். ஆசிர்வதியுங்கள்" என்று கேட்டார்...

உடனே ஆட்சியர் "வாழ்த்துக்கள் மோனிஷா! ஒரு நிமிடம் என்னுடன் வா!" என்று அழைத்துச் சென்று தன்னுடைய கார் கதவைத் திறந்து, "என் காரில் என் இருக்கையில் உட்கார்" என கூறி யாரும் எதிர்பாராத நிலையில் அந்த மாணவியை சற்று நேரம் ஆட்சியரின் சைரன் பொருத்திய அரசு காரில் தன் இருக்கையில் அமர வைத்ததுடன், அதன் அருகே தான் கைகட்டி நின்று கொண்டு அந்த மாணவியுடன் விழாவினரை புகைப்படம் எடுக்கவும் சொன்னார்.

பின்னர் அந்த மாணவியிடம், "இந்த புகைப்படத்தைச் சும்மா எடுக்கவில்லை. இதை நீ பார்க்கும் போதெல்லாம் மாவட்ட ஆட்சியர் ஆக வேண்டும் என்ற உத்வேகம் உன்னுள் இருந்து கொண்டே இருக்கும். நானும் உன்னை போல்தான். ஒரு அரசு பள்ளியில் படித்துத்தான் மாவட்ட ஆட்சியராக உயர்ந்தேன். நீயும் ஒருநாள் அப்படி வர எனது மனமார்ந்த ஆசீர்வாதங்கள்" என்று வாழ்த்தினார்.

இந்த நிகழ்வு அங்கிருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியதுடன் மாணவர்களுக்கு மிகுந்த ஊக்கத்தை அளித்தது.

ஒரு மாணவியிடம் மிகுந்த பெருந்தன்மையுடனும் ஊக்குவிக்கும் முறையிலும் நடந்து கொண்ட மாவட்ட ஆட்சியரின் செயலை அனைவரும் பாராட்டினார்.