தேனீ அருகே உள்ள பெரியாறு புலிகள் சரணாலயத்தில் நவீன கேமராக்கள் மூலம் புலிகள் கணக்கெடுப்பை தொடங்கியது.

தமிழக கேரள எல்லையில் பெரியாறு புலிகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த புலிகள் சரணாலயத்தில் கண்காணிப்பு காமிரா மூலம் புலிகள் கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது.

இதற்காக பெரியாறு, தேக்கடி, வல்லக்கடவு உள்பட்ட ஐந்து எல்லைகளை 252 பகுதிகளாக பிரித்து, ஒரு பகுதிக்கு இரண்டு செட் கேமராக்களை அமைத்து புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

கேமராவில் பதிந்துள்ள பட விபரங்கள் நேசனல் டைகர் கன்சர்வேஷன் அத்தாரிட்டியிடம் வழங்கப்படும். அவர்கள் புலிகளின் மீதுள்ள கோடுகளை வைத்து ஆராய்ந்து அதன் எண்ணிக்கையை முறையாக தெரியப்படுத்துவார்கள். இந்த கணெக்கெடுப்பு பணிகளை வரும் நவம்பர் 17 வரை நடத்த உள்ளதாக புலிகள் சரணாலய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த புலிகள் சரணாலயத்தில் கடந்த 2013-ம் ஆண்டில் கேமரா மூலம் புலிகள் கணெக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது 40 புலிகள் அந்த சரணாலயத்தில் இருந்தது தெரியவந்தது.