கார் விபத்தில் 3 பேர் பலி..! கட்டிமுடிக்கப்படாத பாலத்தில் சென்றது ஏன்..! காரணம் இதுதான்...!
சோழவரம் அருகே முழுமையாக கட்டி முடிக்கப்படாத பாலத்தில் சென்ற கீழே விழுந்து விபத்திற்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் கொளத்தூரை சேர்ந்தவர் பழனி. இவர் கடந்த வியாழக்கிழமை தனது மனைவி, மகள், மருமகன் ஆகியோருடன் மீஞ்சூரில் உள்ள உறவினர்களின் இல்ல விழாவிற்கு காரில் சென்றுள்ளனர்.
பின்னர் விழா முடிந்ததும் மீண்டும் வீடு திரும்பியுள்ளனர். காரை கதிர்வேல் என்ற கார் ஓட்டுனர் ஓட்டிவந்தார்.
சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது, வரும் வழியில் முழுமையாக கட்டிமுடிக்கப்படாத பாலம் ஒன்று இருந்துள்ளது.
தடுப்புகளும், எச்சரிக்கை பலகைகளும் இல்லாததால் டிரைவர் அந்த பாலத்தின் மீது காரை ஓட்டியுள்ளார். நடுவழியில் வந்ததும் பாலம் முழுமையாக கட்டிமுடிக்கப்படவில்லை என அறிந்த டிரைவர் கதிர்வேலு காரை நிறுத்த முற்பட்டுள்ளார்.
ஆனால் அவரால் நிறுத்தமுடியவில்லை. இதையடுத்து கார் 30 அடி உயரமான பாலத்தில் இருந்து தலை குப்புற கீழே விழுந்து நொறுங்கியது. இதில் காரில் பயணம் செய்த பழனியும் அவரது மனைவியும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையறிந்த அக்கம்பக்கத்தினர் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்த மற்ற 3 பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி பழனியின் மகளும் உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தினர். இதில் விபத்திற்கு காரணம் பாலம் முழுமையாக கட்டி முடிக்கப்படவில்லை என்ற எச்சரிக்கை பலகை இல்லாததே என அப்பகுதியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.