விளை நிலங்களில் இருந்து திருட்டுத்தனமாக மணல் அள்ளிய மூவர் கைது....
இராமநாதபுரம்
இராமநாதபுரம் விளை நிலங்களில் இருந்து திருட்டுத்தனமாக மணல் அள்ளிய மூன்று பேரை காவலாளர்கள் கைது செய்தனர். மணல் அள்ளப் பயன்படுத்திய வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இராமநாதபுரம் மாவட்டம், பேரையூர் அருகே ஆனையூர் பகுதியில் விளைநிலங்களில் மணல் அள்ளப்படுகிறது என்ற தகவல் பேரையூர் காவலாளர்களுக்கு நேற்று கிடைத்தது.
அதன்படி. காவலாளர்கள் ஆய்வு மற்றும் ரோந்து பணியை மேற்கொண்டனர். அப்போது, ஆனையூர் பகுதியில் விளைநிலங்களில் மணல் அள்ளப்பட்டு வருவதை காவலாளர்கள் உறுதி செய்தனர்.
பின்னர், விவசாய நிலத்தில் சோளம் பயிர்களுக்கு நடுவே மணல் அள்ளிய மூன்று டிப்பர் லாரிகள், ஒரு ஜேசிபி இயந்திரம் பறிமுதல் செய்தனர்.
மேலும், மணல் கடத்தலுக்கு உதவியாக இருந்த அருண்குமார் மற்றும் ஓட்டுநர்கள் அசோக்குமார், முத்துகிருஷ்ணன் ஆகிய மூன்று பேரையும் காவலாளார்கள் கைது செய்தனர். தப்பி ஓடிய சுரேஷ்குமார் மற்றும் பழனி என்பவர்களை காவலாளர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மணல் யாருக்காக அள்ளப்பட்டது என்பது குறித்து கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.