திருட்டுத்தனமாக மண் அள்ளி வந்த மூன்று லாரிகள் பறிமுதல்... சோதனையின்போது வசமாக சிக்கின...
திண்டுக்கல்
திண்டுக்கல்லில் முறையான அனுமதியின்றி திருட்டுத்தனமாக மண் அள்ளி வந்த மூன்று லாரிகளை காவலாளர்கள் பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை தூர்வாரும் பொருட்டு சுமார் 1800 குளங்களில் வண்டல் மண் அள்ள விவசாயிகளுக்கு அனுமதி அளித்து ஆட்சியர் டி.ஜி.வினய் உத்தரவிட்டு உள்ளார்.
அதன்படி, விவசாயிகள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட தாசில்தாரிடம் முறையான அனுமதி பெற்று சம்பந்தப்பட்ட குளங்களில் மண் அள்ளிக் கொள்ளலாம். மேலும், இந்த மண்ணை விவசாய தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
ஆனால், பலர் மணலை திருடி சென்று செங்கல் சூளை உள்ளிட்டவற்றுக்கு மண்ணை பயன்படுத்துகின்றனர் என்ற புகார் ஆட்சியருக்கு கிடைத்தது.
இதனையடுத்து மண் திருட்டை தடுக்க அந்தந்தப் பகுதி தாசில்தார்கள் தலைமையில் குழு அமைத்தும், அதனை ஆர்.டி.ஓ. கண்காணிக்க வேண்டும் என்றும் ஆட்சியர் உத்தரவிட்டார். இதேபோல ரோந்து செல்லும் காவலாளர்களும் மண் திருட்டை கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று திண்டுக்கல் அருகே உள்ள வாழைக்காய்பட்டி பிரிவில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் ஜெயச்சந்திரன், உதவி ஆய்வாளர் இளஞ்செழியன் மற்றும் காவலாளர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக மண் அள்ளிவந்த மூன்று லாரிகளை மறித்து சோதனை நடத்தினர். அவற்றில் குளங்களில் இருந்து மண் அள்ளி வந்தது தெரியவந்தது. ஆனால், அந்த லாரிகளில் முறையான ஆவணங்கள் எதுவும் இல்லை.
இதனையடுத்து அந்த மூன்று லாரிகளையும் காவலாளர்கள் பறிமுதல் செய்து தாலுகா காவல் நிலையத்தில் நிறுத்தினர்.