this year in diwali less garbage more fumes due to crackers in chennai
தீபாவளி அன்று பொதுவாக எல்லோருமே பட்டாசுகளை வெடிக்கக் கிளம்பிவிடுவார்கள்! சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகள் என்றால் குதூகலம்தான்.

ஒவ்வொரு முறையும் பட்டாசுகள் விற்பனை சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் களைகட்டும். அதேபோல், பட்டாசுகளால் ஏற்படும் மாசு அளவும் கூடிக்கொண்டே தான் வரும்.
இந்த முறை காற்று மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு, பட்டாசு வெடிப்பதற்கு பல இடங்களில் நீதிமன்றம் கட்டுப்பாடுகளை விதித்தது. ஆனால், இந்த முறை அதிகம் பேர் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர்.
இந்நிலையில், தீபாவளியன்று பட்டாசுகளை அதிகமாக வெடித்ததால் சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. தீபாவளியன்று காற்றில் வழக்கத்தை விட 3 மடங்கு மாசு அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளது. வழக்கமாக இருக்கும் காற்றின் மாசு 100 மைக்ரோ கிராம் என்றும், தீபாவளியன்று அது 300 மைக்ரோ கிராம் வரை அதிகரித்துள்ளது என்றும் கூறியுள்ளது.
தீபாவளியின் போது காற்றின் மாசு அதிகரித்திருந்ததாக அமெரிக்க துணை தூதரகம் தெரிவித்திருந்தது. காற்றில் ஒரு கன மீட்டருக்கு 100 மைக்ரான் என்ற அளவில் இருக்க வேண்டிய நுண் துகள், 158 ஆக இருந்ததாக அது கூறியுள்ளது. இதனால், சுவாசப் பிரச்னை அதிகரிக்கும் என்று அது கூறியிருந்தது.
இதே போல், கடந்த ஆண்டை விட, இந்தாண்டு காற்று மாசு அதிகரித்திருப்பதாக, சென்னையில் 5 இடங்களில் ஆய்வு செய்த மாசு கட்டுப்பாட்டு வாரியமும் அறிவிட்த்துள்ளது. தீபாவளி தினத்தன்று நிலவிய வானிலையால் மிதக்கும் நுண்துகள்கள் பரவாமல் ஒரே இடத்தில் நிலை கொண்டதும் கண்டுபிடிக்கப்பட்டதாக அது கூறியுள்ளது.
சென்னையில் அதிகபட்சமாக சௌகார்பேட்டையில் 777 மைக்ரோ கிராம் நுண்துகள்களும், திருவல்லிக்கேணி - 597, நுங்கம்பாக்கம் - 541, தியாகராயநகர் - 529, பெசன்ட் நகர் - 387 மைக்ரோ கிராம் நுண்துகள்கள் பதிவானதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதே நேரம் தீபாவளி அன்று வெடிகளை வெடிப்பதால், மிஞ்சும் பேப்பர், மருந்து வெடிபொருள் குப்பைகள் அதிகம் சேரும். ஆனால், சென்ற வருடம் 80 டன் குப்பைகள் இவ்வாறு சேர்ந்த நிலையில், அது பாதியாகக் குறைந்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வருடம் சுமார் 40 டன் குப்பைகள் அகற்றப்பட்டதாம்.
