வணிகர்கள் கடை அடைப்பு செய்ததால்தான் இந்த போராட்டம் வெற்றி பெற்றது - வெள்ளையன் பெருமிதம்
தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் இன்று போராட்டம் நடத்தப்போவதாக திமுக அறிவித்தது. இதற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், விடுதலை சிறுத்தைகள் உள்பட அனைத்து கட்சியினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதேபோல், வியாபாரிகள் சங்கங்கள், தொழிற்சங்கங்கள், ஆட்டோ டிரைவர்கள் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்பாட்டம் நடந்தது. மத்திய அரசே தமிழக விவசாயிகளை வஞ்சிக்காதே! தமிழகத்தை பாலைவனம் ஆக்காதே! என கோஷமிட்டனர்.
இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கம் பேரவை தலைவர் வெள்ளையன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தங்களின் வாழ்வுரிமையை காப்பாற்ற தொடர்ந்து போராடி வரும் விவசாயிகளுக்காக இன்று முழுமையாக கடையடைப்பு செய்து இங்கு போராட்டம் நடத்துகிறோம். தமிழகம் முழுவதும் 62 லட்சம் கடைகள் மூடப்பட்டுள்ளன.
விவசாயத்தையும், வணிகத்தையும், மத்திய அரசு உலக வர்த்தகத்தின் மூலமாக அழித்து வருகிறது. இந்த வறட்சிக்கு உலக வர்த்தகம் காரணம். அதை அழிக்க வேண்டும். இன்று விவசாயிகளும்,வணிகர்களும் இனையந்துள்ளோம்.
இந்த போராட்டத்தில் முழுக்க வணிகர்கள் கடை அடைப்பு செய்ததால்தான் இந்த போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. இந்த ஒற்றுமை தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.